எலியோட்டம்
இளமைக்கால இலக்கிய நண்பன் ஒருவனை, பல்கலைக்கழக பணி
நிமித்தமாக நான் கிழக்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்றிருந்த பொழுது சந்தித்தேன்.
நான் தங்கியிருந்த ஹோட்டலின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பணிபுரிவதாக அவன் சொன்னான்.
கல்லூரி நாட்களில் அவனும் நானும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு
வாழ்ந்தோம். பிற மொழி இலக்கியங்களை அவன் நிறையவே வாசிப்பான். மரபுகள் மீறப்பட
வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது அவன் கொள்கை. இது சம்பந்தமாக பலதடவைகள் அவன்
கல்லூரி நண்பர்களுடன் முரண்பட நேர்ந்ததும் உண்டு.
இலங்கையில் நடந்த இனக்கலவரம், அதைத் தொடர்ந்த போராட்டம், புலம் பெயரும் நிர்ப்பந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்து விட்டோம். இப்போது இருண்ட கண்டத்தின் நாடொன்றிலே எதிர்பாராத சந்திப்பு.