ஆசி கந்தராஜா
இலங்கை இந்திய நாடுகளில் இப்பொழுது பழங்களின் காலம். மாம்பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன.
வேகமான வாழ்க்கை முறையால், தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண், வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் 'கல்சியம் கார்பைடு' என்னும் இரசாயனம்தான் என கண்டறியப்பட்டுள்ளது. அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் காய் பிஞ்சுகளை முற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன் என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் இது அப்பிள், எலுமிச்சை மற்றும் தோடங்காய்களிலிருந்து பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.