வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.
நாட்டை நினைப்பாரோ...' (1)
ஆசி கந்தராஜா
1. காவா சடங்கு
காலையில் காவா (Kava) அருந்தும் சடங்கு. அதைத் தொடர்ந்தே மாலை ஒரு மணிக்கு, மாநாட்டின் முதல் அமர்வு எனச் சொன்னார்கள். சர்வதேச மாநாடொன்றில் இந்த ஒழுங்குமுறை, பேராசிரியர் சுந்தரமூர்த்தியின் மனதுக்கு நெருடலாக இருந்தது. பிஜியின் தலைநகர் சூவாவில், தென் பசிபிக் நாடுகளுக்கான பல்கலைக் கழகமொன்றுண்டு. அங்கு நடந்த விவசாய மாநாடான்றில், ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றபோதே அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.
பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் தாவரம் 'காவா'. இது மிளகு மற்றும் வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை காயவைத்து இடித்து மாவாக்கி, தண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டி, காவா பானத்தைத் தயாரிப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில், திருமணம், பிறப்பு, மரணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களில் காவா பானம் முக்கிய பங்கு வகிக்கிறது.
காவா என்ற பானத்தை, பேராசிரியர் சுந்தரமூர்த்தி முன்பு சிட்னியில் வசிக்கும் அவரது பிஜி நண்பரின் வீட்டிலும் அருந்தியிருக்கிறார். களிமண்ணை தண்ணீரில் லேசாக கலந்து விட்டது போன்ற கலங்கல் திரவம் அது. மரத்தால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமொன்றில் வைத்திருந்தார்கள். பாயை விரித்து பாத்திரத்தைச் சுற்றி நிலத்தில் இருந்தவாறு, தும்பு செதுக்கிய தேங்காய்ச் சிரட்டையில் காவாவை அள்ளி அள்ளி மாலை வரை குடித்தார்கள். சிரிப்பும் அரட்டையும் பின்னர் தூக்கமும் காவாவுடன் சேர்ந்த சமாச்சாரங்கள் என, அன்று அவர் தெரிந்து கொண்டார். காவா அவருக்குக்கு ருசிக்கவில்லை. தொண்டை கட்டியது. நெடுநேரம் தலை கனத்து அம்மலாகவும் இருந்தது.
பிஜிக்கு வந்தபோது, மீண்டும் காவா அருந்த வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டார். மாலை அமர்வில், அவர் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்போது தலை அம்மலாக இருக்கும் என்ற பதகளிப்பில் காவா குடிப்பதை தவிர்க்க முயன்றார். அவர்கள் விடவில்லை. காவா நிரம்பிய, பெரியதொரு சிரட்டையை கையில் திணித்துவிட்டார்கள். குடிப்பதுபோல பாசாங்கு செய்தவாறு அருகிலிருந்த பிஜி பேராசிரியரிடம் காவா சடங்கு பற்றிக் கேட்டார்.