மரபணு வினாவிடை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய முதலாம் சைவ
வினாவிடையை நீங்கள் படித்திருக்கலாம். ஏழு அத்தியாயங்களைக் கொண்ட சைவ வினாவிடையின்
முதலாம் அத்தியாயம் 'கடவுள் இயல்' பற்றியது. அதிலுள்ள
முதலாம், மூன்றாம், ஏழாம் கேள்விகள் இவை.
உலகத்துக்குக் கருத்தா
யாவர்?
·
சிவபெருமான்.
சிவபெருமான்
ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் என்ன?
·
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்
மூன்றுமாம்.
சிவபெருமானின்
திருக்குமாரர்கள் யாவர்?
· விநாயகக் கடவுள், வீரபத்திரக் கடவுள், வைரவக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள்
என்னும் நால்வர்.
விநாயகர் முதல் முருகன்
வரை, அனைத்து குமாரர்களும்
சிவபெருமானின் பிள்ளைகளா?
சிவபெருமான்
செய்யுந் தொழில்கள் என்ன?
என்ற
வினாக்களுக்கு நாவலர் சொன்ன விடைகள் முற்றிலும் சரியானதா? என்ற கேள்விகள் ஒரு
சிலரால் இன்றும் கேட்கப்படுகிறன. உமாதேவியார் தனது ஊத்தையை உருட்டியதால் தோன்றியதே
பிள்ளையார் என வடஇந்திய நூல்களும் சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய
ஆறுபொறிகள் ஒன்றுசேர்ந்து ஆறுமுகமாகி முருகக் கடவுளாகியதாக தென்இந்திய
புராணங்களும் சொல்கின்றன. இதன்படி பிள்ளையாரும் ஆறுமுகனாகிய முருகனும் கலவிமுறை
மூலம் தோன்ற வில்லை, அவர்கள் சிங்கிள்
பெற்றேருக்கு குளோனிங் மூலம் பிறந்திருக்கவேண்டுமென வாதிட்டான், என் நாத்திக நண்பனொருவன்.
இதன்மூலம் குளோனிங் என்னும் நவீன தொழில்நுட்ப முறை நமது சமயத்தில் ஆதிகாலத்திலேயே
இருந்ததை ஒத்துக்கொள்ளுகிறாயா? என நண்பனுக்கு கவுண்டர்
அட்டாக் கொடுத்தேன் நான்.
எதுஎப்படியிருந்தாலும் இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆழமானதும் சிக்கலானதுமான பல விஷயங்களை, பாமரர்களும் புரியும் வண்ணம் ஆறுமுக நாவலரால் வேறு விதமாக எழுதியிருக்க முடியாது என்பது எனது அபிப்பிராயம். அந்த வகையில் விவசாய அறிவியல் சார்ந்த விஷயங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ள, நாவலரின் வழியில் வினா விடைகளாகத் தரும் எனது கன்னி முயற்சியே இந்த அறிவியல் புனைவு.