முதல் பிரசவம்
சவாரித்
தம்பர்…!
என்னை
எழுத்தாளன் ஆக்கியவர்களுள் இவர் முக்கியமானவர்.
இருபதாம்
நூற்றாண்டின் அறுபதுகளில், தினகரனில், திங்கள் முதல் வெள்ளிவரை சவாரித்தம்பர் என்னும், தொடர் கேலிச் சித்திரம் வெளி வந்தது. இதன் மறுவடிவம், வார மஞ்சரியில் சித்திர கானம் என்ற பெயரில் வந்தது. இவற்றை வரைந்தவர் சுந்தர்
என அழைக்கப்பட்ட திரு சிவஞானசுந்தரம் அவர்கள். இவரது கேலிச் சித்திர நாயகர்களான
சவாரித் தம்பர், சின்னக்குட்டி, பாறி மாமி, மைனர் மச்சான் ஆகிய அனைவரும், நாம் அன்றாடம் ஊரில் சந்திக்கும் பாமர மக்கள், சாதாரண மனிதர்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், இலங்கை அரசியல் மற்றும் சாதி வேறுபாடுகள், பிற்போக்குத்
தனங்கள், மூடக் கொள்கைகளை நகைச் சுவையாக இவர்கள் நையாண்டி
செய்தார்கள். சுந்தரின் திறமையை ஊக்குவித்தவர் திரு கைலாசபதி. கால ஓட்டத்தில்
கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும், கார்டுநிஸ்ட்
சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவருடன் அவரது கேலிச் சித்திர பாத்திரங்களும்
வீரகேசரிக்கு சென்றன. இவரே பின்னர் சிரித்திரன் என்ற கேலிச் சித்திர சஞ்சிகையை
யாழ்பாணத்தில் ஆரம்பித்து நடத்தியவர்.
அப்போது நான் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சவாரித்தம்பரை வாசிக்காமல் படுப்பதில்லை என்னும் அளவுக்கு அதில் நான் ஊறிப்போயிருந்தேன். சவாரித்தம்பரை வாசிப்பதற்காகவே, நான் செய்தித்தாளுக்காக காத்திருந்த காலங்கள், இன்றும் என் நினைவில் சுழன்றடிக்கின்றன.