'களவாடப்பட்ட குழந்தைகள்' (2)
ஆசி கந்தராஜா
2. வெள்ளையர்கள் பழக்கிய குடி.
அன்று முழு நிலவு. அதுவும் சித்திரைப் பூரணை!
அன்றைய தினத்தை தங்களின் மூதாதையர்களின் தினமாக
ஆட்டம் பாட்டத்துடன் அநுஷ்டித்தார்கள். பகல் முழுவதும் ஒருவித போதை மயக்கத்திலும்
உறக்கத்திலும் இருந்தவர்கள், மாலையானதும் 'யுக்கலிப்ரஸ்' மரத்தின் கீழ் ஒன்று
கூடினார்கள். கருக்கல் நேரத்தில், பைன் மர ஊசி இலைகளையும், யுக்கலிப்ரஸ் மர இலைகளையும் எரித்துப் புகை போட்டு, பாட்டுப் பாடினார்கள்.
வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் கொழுத்த 'கங்காரு'க்களை தோளில் சுமந்து
வந்தார்கள். அவற்றைத் தோலுடன் நெருப்பில் கருக்கி, யுக்கலிப்ரஸ் இலைகளை எரித்த புகையில் பதப்படுத்தி, மூதாதையர்களுக்குப்
படைத்தார்கள். அதன் பின்னர் விருந்தும் ஆட்டமும் துவங்கியது. இப்படியான ஒரு
சூழலில், அபொர்ஜினி குழுத் தலைவரை, மாணவர்கள்
சுந்தரமூர்த்திக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது இயல்பாகவே அபொர்ஜினி மக்களின்
வரலாறு பற்றிப் பேச்சு வந்தது.
'தன்னுடைய பெயர் அக்காமா (Akama), திமிங்கிலத்தின் பலம் கொண்டவன் என்பது அதன் பொருள்' என்று, தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் ஒரு பழுத்த அநுபவசாலி என்பது பேச்சில் தெரிந்தது. 'பாம்' மர இலை ஒன்றால் காத்து விசிறியபடி, தங்களது வரலாற்றில் நடந்த சோக அத்தியாயங்களை, தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் சொல்லத் துவங்கினார்.
1770ம் ஆண்டு கப்டன் குக் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர்களின் வருகை (1788), ஆதிவாசிகளின் வாழக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. முதலில் குற்றவாளிகளும் அவர்களின் காவலர்களும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்டார்கள். பின்னர் பிரித்தானியாவில் வாழ லாயக்கற்ற காவாலிகளும், 'கடைப்புலி'களும் வந்தார்கள். வரும்போது அவர்கள் 'சும்மா' வரவில்லை! விஷக் காச்சல், அம்மை போன்ற நோய்களையும் கொண்டு வந்தார்கள். அதுவரை ஆதிவாசிகளிடம் இல்லாத பால்வினை நோய்களை, பரப்பியவர்களும் வெள்ளையர்களே. காலப் போக்கில் நாடு விருத்தியடைய, ஐரோப்பிய வெள்ளையர்களின் குடியேற்றம் படிப்படியாக ஆரம்பமாகியது.