Thursday 29 February 2024

மரபணு வினாவிடை

 ஆசி கந்தராஜா



ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய முதலாம் சைவ வினாவிடையை நீங்கள் படித்திருக்கலாம். ஏழு அத்தியாயங்களைக் கொண்ட சைவ வினாவிடையின் முதலாம் அத்தியாயம் 'கடவுள் இயல்' பற்றியது. அதிலுள்ள முதலாம், மூன்றாம், ஏழாம் கேள்விகள் இவை.


உலகத்துக்குக் கருத்தா யாவர்?

·         சிவபெருமான்.


சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் என்ன?

·         படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.


சிவபெருமானின் திருக்குமாரர்கள் யாவர்?

·  விநாயகக் கடவுள், வீரபத்திரக் கடவுள், வைரவக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.


விநாயகர் முதல் முருகன் வரை, அனைத்து குமாரர்களும் சிவபெருமானின் பிள்ளைகளா? சிவபெருமான் செய்யுந் தொழில்கள் என்ன? என்ற வினாக்களுக்கு நாவலர் சொன்ன விடைகள் முற்றிலும் சரியானதா? என்ற கேள்விகள் ஒரு சிலரால் இன்றும் கேட்கப்படுகிறன. உமாதேவியார் தனது ஊத்தையை உருட்டியதால் தோன்றியதே பிள்ளையார் என வடஇந்திய நூல்களும் சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறுபொறிகள் ஒன்றுசேர்ந்து ஆறுமுகமாகி முருகக் கடவுளாகியதாக தென்இந்திய புராணங்களும் சொல்கின்றன. இதன்படி பிள்ளையாரும் ஆறுமுகனாகிய முருகனும் கலவிமுறை மூலம் தோன்ற வில்லை, அவர்கள் சிங்கிள் பெற்றேருக்கு குளோனிங் மூலம் பிறந்திருக்கவேண்டுமென வாதிட்டான், என் நாத்திக நண்பனொருவன். இதன்மூலம் குளோனிங் என்னும் நவீன தொழில்நுட்ப முறை நமது சமயத்தில் ஆதிகாலத்திலேயே இருந்ததை ஒத்துக்கொள்ளுகிறாயா? என நண்பனுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்தேன் நான்.

எதுஎப்படியிருந்தாலும் இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆழமானதும் சிக்கலானதுமான பல விஷயங்களை, பாமரர்களும் புரியும் வண்ணம் ஆறுமுக நாவலரால் வேறு விதமாக எழுதியிருக்க முடியாது என்பது எனது அபிப்பிராயம். அந்த வகையில் விவசாய அறிவியல் சார்ந்த விஷயங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ள, நாவலரின் வழியில் வினா விடைகளாகத் தரும் எனது கன்னி முயற்சியே இந்த அறிவியல் புனைவு.

Thursday 15 February 2024

சைவமுட்டை

 

பிரதி புதன்கிழமைதோறும் ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த நிலையில், கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.



வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன். 

Wednesday 7 February 2024

சயந்தனின் ஐமிச்சங்கள்.

 

ஐமிச்சம் 1:

பூக்காமல் காய்க்கும் மரமெது?

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி எதையும், சயந்தன் தவற விடுவதில்லை. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூக்காமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது. சயந்தனும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை. அவனது ஆச்சியும் அது உண்மைதான் என எண்பித்தார். இது எப்படிச் சாத்தியம்? என அறிய, மாகாண விவசாய அதிகாரியாகப் பணிபுரிந்த வேதவல்லி அக்காவைக் கேட்டான்.

பலா பூக்குமடா, எவர் சொன்னவர் பூக்காதென்று? பலாவின் பூக்கள் பச்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறுவேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல்க் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்'.

பெண் பூக்கள்?

Thursday 1 February 2024

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் -1998

(பேட்டி / நேர்காணல்)


ஸ்திரேலியா, சிட்னி ‘தமிழ் முழக்கம்’ வானொலிக்காக ஆசி.கந்தராஜா அவர்கள் 1998ம் ஆண்டு நடிகர் நாகேஷ் அவர்களுடன் கண்ட பேட்டியின் எழுத்து வடிவம்.


வானொலி: வணக்கம் நாகேஷ் சார்…

நாகேஷ்: வணக்கம் சார்…


வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?

நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்… இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு.


வானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்…

நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க


வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்…

நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப…..கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய…


வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?

நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன்…, சார் உங்களுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?


வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?

நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.


வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

Monday 2 October 2023

பூக்களுக்கும் பூக்களுக்கும் கல்யாணமாம் கல்யாணம்..!

-ஆசி கந்தராஜா-

சிட்னியில் இப்போ வசந்த காலம்.

இன்று 2 October 2023, ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரச விடுமுறை. உலகமெங்கும் மே மாதம் 1ம் திகதி தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும்போது, ஏன் நியூ சவுத் வேல்ஸ்ஸில் இன்று விடுமுறை எனக் கேட்க்காதீர்கள். இங்கு இப்படித்தான்.

என்னுடைய மனைவி மெல்பனில் வசிக்கும் மகள் வீட்டுக்குப்போக, நான் சோம்பலை அடைகாத்து, வீட்டில் பொழுதைப் போக்கினேன். காலை பத்து மணி இருக்கும். கைத்தொலைபேசி சிணுங்கியது. மறு முனையில் செல்லத்துரை அண்ணை.

இண்டைக்கு வீட்டிலை நண்டுக்கறி தம்பி, மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திட்டுப் போவன், என படு கரிசனையாக அழைத்தார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் தங்கம்மா அக்காவின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் காரமான நண்டுக்கறியை நினைத்ததும் நாக்கில் ஜலம் ஊறியது. அடுத்த அரை மணி நேரத்தில் செல்லத்துரை அண்ணை வீட்டில் ஆஜரானேன்.

நண்டுக்கறி மூக்கைத் துளைத்தது. தங்கம்மா அக்கா நண்டுக்கறிக்குத் தோதாக குசினியில் முருங்கை இலைச் சொதி வைத்துக்கொண்டு நின்றார்.

பின் வளவில்,  நட்ட கண்டுகளுக்குத் தண்ணிர் விட்டபடி, இஞ்சாலை வாதம்பி, எனக் குரல் கொடுத்தார் செல்லத்துரை அண்ணை.

Thursday 21 September 2023

 

 

“... , சோனியின் வெற்றியைக் கண்டால் ஏற்காது”

 - திரு அப்துல் ஹமீட் -



ஆசி கந்தராஜா - திரு அப்துல் ஹமீட் செவ்வி பற்றி, வானொலியாளர், கவிதாயினி, சமூக செயற்பாட்டாளர் சௌந்தரி கணேசன் எழுதி, ஆசிமுற்றம் இணையத் தளத்தில் பிரசுரமாகும் எதிர்வினை.

-சௌந்தரி கணேசன்-

செவ்வியை செவிமடுத்தேன். உங்களது கேள்விகளுக்குள் உள்ள சிறப்பான நோக்கத்தைக் காணமுடிகிறது. இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளை உருவாக்குவதை பார்க்கின்ற போது மிகவும் சங்கடமாகவுள்ளது. விளக்கங்களை மறுத்து, பேச்சில் வெறுப்பை உமிழும் திரு அப்துல் ஹமீத் அவர்கள், உங்கள் கேள்வியின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறாரோ தெரியவில்லை. செவ்வி என்பது தனிமனிதனின் புகழை மட்டும் பரப்புவதாகவோ பகிர்வதாகவோ இருக்காது நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு நேயரும் இதே கேள்வியைக் கேட்க விரும்பியிருப்பார் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.  நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே விலகி நிற்கும் ஒவ்வாமை திரு அப்துல் ஹமீத்தின் உடல் மொழியில் நிலையாகக் குடி கொண்டிருந்ததையும் தெளிவாக உணரமுடிகிறது.

ஒருவரின் கருத்து ஏற்பிற்குரியதா அல்லது விமர்சனத்திற்குரியதா என்பது வேறு, ஆனால் உரையாடலின் முறைமையை தன் வசதிக்கேற்ப எத்தருணத்திலும் வளைத்து விடக்கூடாது. 

“...சோனியின் வெற்றியைக் கண்டால் ஏற்காது” 

- என்று போகிற போக்கில் அடித்து விட்டுப் போவதற்கு திரு அப்துல் ஹமீத் அவர்களுக்கு அசாத்தியத் துணிவு வேண்டும். எவ்வளவு காலம் சென்றாலென்ன, எவ்வளவுதான் சிந்தனையில் வளர்ச்சி டைந்தாலென்ன, அடிப்படையான மனக்காழ்ப்பு இல்லாமல் அந்த வார்த்தை வெளிவராது. ஒற்றைப் படையான, குத்து மதிப்பான உளப் பதிவின் மூலம், தர்க்க அடிப்படை ஏதும் இன்றி தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கின்றார், திரு அப்துல் ஹமீத் அவர்கள்.  உங்களைத் தாக்கும் வெறியில், அல்லது உங்களை எதிர்க்கும் வகையில் மிக எளிதாக ஒட்டுமொத்தச் சமூகத்தையே எதிர்ப்பக்கம் தள்ளிவிடுகிறார். அவரது இந்தக் கூற்றை அல்லது அவரது இந்த உளப்பதிவை வெறும் கோவம் என்று நிராகரிப்பது மிகவும் கடினம். 

தட்டையான சிந்தனைகளில் அழுந்திப்போயிருக்கும் சமூகப்பரப்பில் ஒரு அசல் படைப்பை முன்வைப்பது என்பது மிகவும் சிக்கலானது. ஆனாலும் நீங்கள் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறீர்கள். மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறேன். சில இடங்களில் உங்களது சங்கடங்களைப் பார்க்கும் போது மனம் இளகுகின்றது. இதே பாதிப்பு அறிவிப்பாளர் திரு அப்துல் ஹமீத்தின் அபிமானிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஓர் செவ்வி நடைபெறும்போது அடிப்படை மரியாதை அத்தளத்தில் நிலவவேண்டும். இருவருக்கும், இருவரதும் கல்வி, நுண்ணுணர்வு, நேர்மை மீதான நம்பிக்கை இருக்கவேண்டும். மட்டம் தட்டுவதில் வெற்றி காணும் செவ்விகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல செவ்வியென்பது இருதரப்புக்கும் நலமளிக்கவேண்டும். கவனிப்பவர்களுக்கும் பயனளிக்கவேண்டும். ஆனால் இந்தச் செவ்வியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அவசரப்பட்டுச் சிந்திப்பதும், சிந்தனையில் நிதானம் இல்லாததும், தன்னை மையமாக்கி வைத்துப் பேசுவதும் எரிச்சலடைய வைக்கிறது. இதை எனது பொது அவதானமாக முன்வைக்கின்றேன். எந்தக் காரணத்திற்காகவும் எனது கருத்துக்களை பதுங்கியும் மழுப்பியும் சொல்ல வேண்டிய அவசியம் என்னிடம் இல்லை என்பதையும், கடந்த 25 ஆண்டுகளாக  ஊடகவியலாளராகப் பணியாற்றும் அனுபவத்திலும் இதை என்னால் பதிவுசெய்ய முடிகிறது. 

மதிப்பீடு என்பது பெரும்பாலும் அதை முன்வைப்பவனின் இயல்பையும் திறனையும் நோக்கத்தையும் சார்ந்துதான் இருக்கும்.

பேராசிரியரின் கேள்விகளும் திரு அப்துல் ஹமீத்தின் பதில்களும் முற்றிலும் வேறு வேறு திசைகளில் போய்க்கொண்டிருந்தன. அவற்றை இதற்கு மேல் விவாதிப்பதில் பயன் இல்லை.  ஆனாலும் பேராசிரியரின் ஆளுமையை அறியாமல் இந்தப் பதிவைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகின்றேன். காரணம், பேராசிரியர்மீது அன்பும், அபிமானமும், மரியாதையும் கொண்டவள் நான்.

பொதுவாகவே நடிகர்கள், கலைஞர்கள் போன்றோர்களைத் தலைமேல் கொள்ளும் ரசிகர்களும் வாசகர்களும் இருப்பார்கள். அதற்காக அவர்கள் ஒன்றும் அனைத்தும் கடந்த புனிதர்கள் அல்ல.  இருவரும் மிகப்பெரிய ஆளுமைகள், இவர்களது மாண்பைக் குலைக்கும் எண்ணமும் என்னிடமில்லை என்பதைக் கூறிக்கொண்டு, நிகழாத விவாதத்தை இங்கே இத்துடன் இறுதிப் பதிவாக்கி நிறைவு செய்கிறேன்.

பேராசிரியர் அவர்களே!

மெல்லிய புன்னகையுடன் கடந்து போக வேண்டிய விஷயங்கள் இவை, இதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் நீங்கள் இல்லை, நலமாக இருங்கள்.


சௌந்தரி கணேசன்

சிட்னி,  20 செப்டம்பர் 2023.

ஆசி கந்தராஜா - திரு அப்துல் ஹமீட், செவ்வியை முழுமையாகக் கேட்க ஆசி கந்தராஜாவின் முகநூலிலுள்ள (A S Kantharajah), 14. செப்டம்பர் 2023 பதிவைப்பார்க்கவும்.





Sunday 9 July 2023

ஆசி கந்தராஜாவின்

'அகதியின் பேர்ளின் வாசல்'

-    வாசிப்பு அனுபவம்

ரஞ்ஜனி  சுப்ரமணியம்

 



மிகைப் படுத்தல்களும் திரிபுபடுத்தல்களும் இல்லாது, வரலாற்றினை அடியொற்றி எழுதிய 'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் நாவல், ஈழத்தமிழர்களின் ஆரம்பகால புலம்பெயர்வின் தெளிவான குறுக்கு வெட்டுமுகம் எலாம். ஜேர்மனிக்கான அன்றைய புலம்பெயர்வின் பயணப் பாதைகள் பற்றியும் அதன் பின்னணியில் ஆதிக்க நாடுகளின் பனிப்போர்கள் பற்றியும் இதுவரை அறியப்படாத பல உண்மைகள் அந்நாவலில் எழுதப்பட்டுள்ளன. தமிழினத்தின் மீதான அரச வன்முறைகளை அடுத்து, தமிழ் இயக்கங்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாறிய காலமாகிய 1970 களில் ஆரம்பமாகி 2017 இல் நிறைவுபெறும் ஐந்து தசாப்தங்கள், நாவலின் பேசுபொருள். 

பேரினவாதத்தின் அரசியல் ஆதாயங்களுக்காக தாயகத்தில் தமிழினத்துக்கான பல வாயில்கள் மூடப்பட்டன. இதுவே, சர்வதேச அரசியலின் தந்திரோபாய நடவடிக்கைகளால் மேற்கு நாடான ஜேர்மனியில், ஏற்கனவே இருந்த ஓர் வாயிலை புலம்பெயர்ந்த அகதிகளுக்கு இனங்காட்டியது. புலம்பெயர்வின் வரலாற்றுப் புலங்களும் காட்சிப் புலங்களும் நாம் அறிந்தவை, அறியாதவை என, இரு பிரிவுகளுள் அடங்குகின்றன. உண்மையிலேயே நாட்டில் வாழ முடியாத உயிராபத்து நிறைந்த சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் கோரி புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர். நிலைமையை சாதகமாகப் பயன் படுத்தி பொருளாதார மேன்மைகளுக்காக அகதி என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றுமோர் பகுதியினர். இந்த இரு பகுதியினரையும் இலக்காகக் கொண்டு, மனிதக் கடத்தல், போதைவஸ்துக் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்த பண முதலைகள், சட்டவிரோதமாக புலம்பெயரும் பெண்களை சீரழித்த காமுகர்கள், விரும்பியோ விரும்பாமலோ பயண முகவர்களை நம்பி இடைநடுவில் அகப்பட்டு மொழியறியா நாட்டுச் சிறைகளில் வாடும் அப்பாவிகள், பயணவழியில் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் என பலரின் கதைகள் இங்கு கூறப்பட்டு உள்ளன. ஆனால் 1980களில் இனக்கலவரங்களை அடுத்து, ‘நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போலவும்’, 'செல்லச்சந்நிதி கோயில் தேர்த்திருவிழாவிற்கு அள்ளுப்பட்டு போனது போலவும்'  ரஷ்ய ஏரோபுளோட் விமானத்தின் மூலம் ஜேர்மனியை நோக்கி அகதிகளாக படையெடுத்த எம்மவர்களுக்கான வாயில் எங்கே திறந்திருந்தது என்ற உண்மையோ, எப்படித் திறந்தது என்ற வரலாற்றையோ யாரும் அறிந்திருக்கவில்லை.

Tuesday 13 June 2023

 

சீட்லெஸ் மாம்பழங்கள், சாத்தியமா?

ஆசி கந்தராஜா.





2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். முதிய விவசாயி ஒருவர் தக்காளி விதைகள் வாங்க, கடைக்குப் போவார். வியாபாரி தக்காளி விதைகளைக் காட்டி இது ஹைபிறிட் விதை, கொத்துக் கொத்தாய்க் காய்க்கும், கூடைகூடையாய் அள்ளலாமெனச் சிலாகித்துச் சொல்வார்.

அப்படியா, அடுத்தமுறை நான் விதை வாங்க கடைக்கு வரவேண்டாமல்லவா. அறுவடைசெய்யும் பழங்களில் இருந்து விதைகளை எடுத்துப் போடலாம், என்பார்.

இல்லை, வந்துதான் ஆகணும். இதிலை விதையே இருக்காது.

அதெப்படி? ஈச்சமரம், எலந்தைமரம், மாமரம் எல்லாத்திலும் விதையிருக்கு. எப்படித் தக்காளிக்கு விதையில்லாமல்போகும்? இது முதியவரின் கேள்வி.

இது கலப்பு விதை, வெள்ளைக்காறன் செஞ்சது. விதை இருக்காது, என்பார் வியாபாரி.

அவனுக்குமாத்திரம் எப்படி விதை கிடைச்சுது? இந்த விதையைக் கண்டுபிடிச்சவனுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்து, அதுக்கு விதைக்கொட்டை இல்லாமல் இருந்தால், அப்ப தெரியும் அவனுக்கு, எனச் சொல்லிவிட்டு விதையை வாங்காமலே போய்விடுவார் முதியவர்.

இந்தக் காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்து இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணம் கொட்டையில்லாத பழங்களுக்கான மக்களின் அங்கலாய்ப்பும் அதை விருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் ஆராச்சி முனைப்புக்களுமே.