Tuesday 10 November 2020

தலைவராவது எப்படி…?


வங்கள் என்னை சும்மா இருக்க விடுகிறாங்களில்லை, இந்த முறையும் கொம்மிற்றியில் போட்டிருக்கிறாங்கள்’ என்ற வாசகத்தை அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்படியான தமாஷா கதைகளை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. இருந்தாலும் பல அமைப்புக்களில் மாறிமாறி, ‘சங்கீத நாற்காலியில்’ இடம் பிடிப்பது போல, பதவிகளில் அமர பலர் அலைந்து திரிவது, அனைவரும் அறிந்த விஷயம்.

இந்தவகையில், புலம்யெர்ந்து வந்து இங்கு குடியேறியபின் வேலை, வீடு, கார், பிள்ளைகளின் படிப்பு பின்னர் கலியாணம் என்ற வரிசையில் ஏதாவது ஒரு அமைப்பின் நிர்வாக சபையில் அங்கத்தவராகி முடியுமானால் பின்னர் தலைவராகவும் வரவேண்டுமென்ற அவா, எம்மில் பலருக்கும் உண்டு.

தலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி தொண்டர்களை வழி நடத்திச் செல்கின்றவர், என்ற உண்மை எங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்?

அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவதும் தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுப்பதும் அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்கி சிந்தித்து செயலாற்றுவதும் நல்ல தலைமைத்துவப் பண்பாகக் கருதப்படுகிறது.

ஆனால் நம்மவர்கள் மத்தியில் மேலே குறிப்பிட்ட தலைமைத்துவப் பண்பில் பல மாறுதல்கள் செய்யவேண்டியது அவசியம் என்பதை ஐயம்பிள்ளை வாத்தியாரிடமிருந்து நான் படிப் படியாகத் தெரிந்து கொண்டேன். கூட்டுறவு இயக்கம், ஆசிரியர் சங்கம் என்று ஊரில் அவருக்கு எலெக்ஷன் தண்ணீர்பட்டபாடு. இங்கும் பல அமைப்புக்களின் ‘கிங் மேக்கர்’ இவர்தான். வாத்தியார் எப்பொழுதும் பிரபல்யமான ஒருவரைத் தூண்டிவிடுவார். அந்த ஆள் வெற்றி பெற்றதும் தன் பிரயாசைகளுக்காக ஒரு சிறிய பதவியை ‘தட்டிப்’ பறித்துக் கொள்வார். திரை மறைவு அதிகாரங்கள் அவருக்குப் போதும். ‘சுழியன்’ என்றாலும் ஐயம்பிள்ளை வாத்தியார் விபரம் அறிந்தவர்!

சமீபத்தில் மெல்பனில் நடந்த நன்பன் ஒருவனின் ஐம்பதாவது பிறந்த நாள் விழாவின் போது வாத்தியாரை மீண்டும் சந்தித்தேன். இத்தகைய விழாக்களின்போது அவர் சொல்லும் ‘பொழிப்பான’ ஊர்ப் புதினம் கேட்க அவரைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அன்றும் அப்படித்தான். சமீபத்தில் நடந்த தமிழர் அமைப்பொன்றின் நிர்வாக சபைத் தேர்தல் பற்றி அங்கு அச்சுவேறு ஆணிவேறாக பிரிச்சு மேயப்பட்டது. விஷயம் தெரிந்த யாரோ கதை கேட்கும் சுதியில் சற்று அதிகமாவே அவருக்கு ஊற்றிக் குடுத்துவிட்டார்கள். அந்தக் கணகணப்பில் வாத்தியார் மிதந்தபோது தலைவராவது எப்படி? என்ற பேச்சை ஆரம்பித்தான் பற்பன். அடுத்த எலெக்ஷனிலாவது அவன் ஏதோ ஒரு அமைப்பின் தலைவராகவேண்டும். அந்த அளவுக்கு வீட்டில் அவனுக்கு நிர்ப்பந்தம். அதுவும் மனைவியிடமிருந்து. கந்தோரில் அவளுடன் வேலை செய்யும் பூங்கொடியின் புருஷன்தான் பிரபல அமைப்பொன்றின் நடப்பாண்டுத் தலைவர். இந்த சந்தர்ப்பத்தில்தான் பற்பன் தலைவராவதற்கான கம்ப சூத்திரத்தையும் நெளிவு சுழிவுகளையும் ஐயம்பிள்ளை வாத்தியார் அவிட்டுவிடார்.

Wednesday 4 November 2020

வித்துவான் வேந்தனாருடன் ஒரு சந்திப்பு...!

லக்கியம் என்பது உயிர்ச் சாயலைத் தொட்டு ஊறிப் பாயும் உணர்ச்சி வெள்ளம். கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் உணர்ச்சிகளையும் இனி வருங்கால மக்களின் வாழக்கை முறைகளையும் நிகழ்காலத்தில் நின்று நோக்க வைக்கும் நிலைக் கண்ணாடி...

இது நான் 1965ம் ஆண்டு பேசிய ஒரு மேடைப் பேச்சின் துவக்கம். ஐம்பத்து நாலு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் இந்த மேடைப்பேச்சு முழுவதும் அச்சரம் பிசகாமல் என் நினைவில் நிற்கிறது. நான் பத்தாம் வதுப்பு படித்த காலம் அது. பாடசாலை மட்டத்தில், அந்த வருடம் நடந்த பேச்சுப் போட்டிக்கு 'இலக்கியத்தின் பயன்கள்' என்னும் தலைப்புத் தந்திருந்தார்கள். எமது பாடசாலையில் தமிழுக்கு 'எல்லாமுமாக' இருந்த பண்டிதருக்கும் எனக்கும் அவ்வளவாக ஒத்துவரவில்லை. நான் ஒரு அதிகப்பிரசங்கி என்பது அவரின் அபிப்பிராயம். பண்டிதரின் அறிவுறுத்தலின்படி, போட்டிகள் முடிந்தபின் மத்தியஸ்தர்களே முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை எமது பாடசாலையில் அப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. எனக்கு அன்றும் நல்ல குரல்வளம். ஏற்ற இறக்கத்துடன் பொருளுணர்ந்து வசனம் பேசுவேன். இருந்தாலும் பேச்சுப் போட்டிகளில் எப்போதும் எனக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. இம்முறை இதைச் சும்மா விடுவதில்லை எனத் தீர்மானித்து, களத்தில் இறங்கினேன். நண்பர்களும் உசுப்பேத்த, 'இலக்கியத்தின் பயன்கள்' என்ற தலைப்பில் யாரைக்கொண்டு எழுதுவிக்கலாம்? என, மூளையைக் கசக்கியபோது, என் நினைவுக்கு வந்தவர் வித்துவான் வேந்தனார் அவர்கள். காரணம் அவர் பொழிப்புரை எழுதிய கம்பராமயணம் மற்றும் இந்து சமய நூல்களே எமக்கு அப்போது பாடப் புத்தகங்களாக இருந்தன.