Sunday 19 December 2021

ஆசி கந்தராஜாவின் 'ஓர் அகதியின் பேர்ளின் வாசல்' வரலாற்றுத் தொடர் நவீனத்தையொட்டிய பின்னுரை...!

 

ஒரு பசுக்கன்றுக்கும் தெரிந்த தேற்றம்

- செல்லையா சுப்ரமணியம்-

-1-

பாடசாலையில் நான் படித்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில்தான் தூயகணிதம் அறிமுகம். எட்டாம் வகுப்புவரை எண்கணிதம்தான். தூயகணிதத்தில் இரண்டு பிரிவுகள். அட்சரகணிதம், கேத்திரகணிதம். இதில் கேத்திரகணிதம்தான் கொஞ்சம் சில்லெடுப்பு. பைதகரஸ் அது இது என்று பல தேற்றங்கள் உண்டு. ஏற்கனவே நிறுவப்பட்ட இவற்றை ஆதார சுருதியாய்க் கொண்டு கேட்கப்படும் கணக்குகளை நிறுவவேண்டும். இந்தத் தேற்றங்களை எமது மண்டையில் ஏற்ற எல்லா ஆசிரியர்களாலும் முடிவதில்லை. ஒரு ஆசிரியர் மட்டும் உபகதை சொல்லி வாழ்நாள் முழுக்க மறக்காதபடி உருவேற்றிவிடுவார்.

ஒரு தேற்றம் - முக்கோணியொன்றின் இரண்டு பக்கங்களை ஒன்று சேர்த்தால் அதன் நீளம் அடுத்த பக்கத்தைவிடக் கூடியது.

இதை ஒரு பசுக்கன்றுகூட நிறுவிவிடும். பசுவை அந்த முக்கோணத்தின் ஒரு மூலைப்புள்ளியிலும் கன்றை இன்னொரு மூலைப்புள்ளியிலும் கொண்டுபோய் விட்டால் கன்று தூரம் குறைந்த வழியால்தான் தாயை நோக்கியோடும். முக்கோணியின் இரண்டு பக்கங்களை சேர்க்கும் நீளத்தைவிட மற்றப்பக்க நீளம் குறைவென்று அந்தக் கண்ணுக்குட்டிக்கே புரிகின்றபோது உங்களுக்குத் தெரியாதா என்ன? என்று அந்த ஆசிரியர் சொன்னபோது, அட இவ்வளவுதானா என்று கேத்திரகணிதம் லேசானது.

Sunday 12 December 2021

12. 12. 2021 உதயன் சஞ்சீவியில்

பணச்சடங்கு:

யாழ்மண்வாசம் வீசும் அந்நிய நிலங்கள்

-அலைமகன்-



ஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசி கந்தராஜா அவர்கள் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். புனைவுக்கட்டுரைகள், சிறுகதை, குறுநாவல் என பல பரிமாணங்களில் படைப்புக்களை தந்துள்ள அவரின் சமீபத்திய வரவு பணச்சடங்கு எனும் சிறுகதைத் தொகுப்பு. நூலாசிரியர் உலகம் சுற்றியவர். விவசாய நிபுணராக உலகின் பல பல்கலைக்கழகங்களில், பல்வேறுபட்ட கலாச்சார வெளிகளில் மனிதர்களை சந்திக்கும், அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். தான்கண்டறிந்த, அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக புனைவுகளாகவும், புனைவுக்கட்டுரைகளாகவும் கொடுக்கும் இலக்கிய தாகம் நிறைந்தவர்.

பொதுவாகவே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய அவதானம் ஒன்றுண்டு. அதாவது தங்களின் தாயகத்து வாழ்க்கையைப்பற்றி தங்கள் படைப்புக்களில் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் அது. இந்த நனவிடைதோய்தல் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தங்களின் இளம் பருவத்தை வடிவமைத்த  நினைவுகளே ஒரு மனிதனில் ஆழ்மன உணர்வுகளில் அவனது வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. அந்த நினைவுகளை இலக்கியத்தில் வடிக்க முடியாதவர்கள் அல்லது அந்த நினைவுகளை வாழ்க்கைப்போட்டியின் அவசரத்தில் தொலைத்துவிட்டவர்கள் தூரதிஷ்டசாலிகள்.

Friday 3 December 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (3)

ஆசி கந்தராஜா



3. விலாங்கு மீன்கள்

ஸ்திரேலியாவில் வாழும் பல்லின சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது அபொர்ஜினி சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், என்பன இன்றும் மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளன. இதனால் இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகமாவதால், பொலீசாரால் கைதுசெய்யப்படும் வீதமும், ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. விகிதாசார எண்ணிக்கையின்படி சிறையிலிருப்போரில் அதிகமானோர் அபொர்ஜினிஸ் மக்களே என புள்ளி விபரம் சொல்கிறது. சிறையில் இவர்கள் காவலர்களால் பாரபட்சமாக நடத்தப்படுவதும், சிறை மரணங்களும் இன்றும் நடக்கின்றன.

காலம் எப்பொழுதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பத் துவங்கினார்கள். வெள்ளையர்களின் அரசுக்கு எதிராக இவர்களின் எதிர்ப்புக்கள் படிப்படியாக வலுவடைய, பூர்வ குடிமக்களுக்கு தாங்கள் செய்த அநீதிகளை, மெல்ல மெல்ல ஒத்துக்கொள்ளத் துவங்கினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில், மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிமக்களுக்கு, இன்றுவரை முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் 1990ம் ஆண்டு 'பூர்வீக காணி உரிமைச் சட்டம்'  வெள்ளையர்களின் அரசால் இயற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2008ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் கெவின்-ரட், அபொர்ஜினி ஆதிவாசிகளிடமிருந்து, பலவந்தமாக பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். காலம் கடந்து கேட்கப்பட்ட இந்த மன்னிப்பை, அபொர்ஜினிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய சமயம் பார்த்து கொக்கி போட்டார், சுந்தரமூர்த்தி.