Tuesday 13 June 2023

 

சீட்லெஸ் மாம்பழங்கள், சாத்தியமா?

ஆசி கந்தராஜா.





2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். முதிய விவசாயி ஒருவர் தக்காளி விதைகள் வாங்க, கடைக்குப் போவார். வியாபாரி தக்காளி விதைகளைக் காட்டி இது ஹைபிறிட் விதை, கொத்துக் கொத்தாய்க் காய்க்கும், கூடைகூடையாய் அள்ளலாமெனச் சிலாகித்துச் சொல்வார்.

அப்படியா, அடுத்தமுறை நான் விதை வாங்க கடைக்கு வரவேண்டாமல்லவா. அறுவடைசெய்யும் பழங்களில் இருந்து விதைகளை எடுத்துப் போடலாம், என்பார்.

இல்லை, வந்துதான் ஆகணும். இதிலை விதையே இருக்காது.

அதெப்படி? ஈச்சமரம், எலந்தைமரம், மாமரம் எல்லாத்திலும் விதையிருக்கு. எப்படித் தக்காளிக்கு விதையில்லாமல்போகும்? இது முதியவரின் கேள்வி.

இது கலப்பு விதை, வெள்ளைக்காறன் செஞ்சது. விதை இருக்காது, என்பார் வியாபாரி.

அவனுக்குமாத்திரம் எப்படி விதை கிடைச்சுது? இந்த விதையைக் கண்டுபிடிச்சவனுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்து, அதுக்கு விதைக்கொட்டை இல்லாமல் இருந்தால், அப்ப தெரியும் அவனுக்கு, எனச் சொல்லிவிட்டு விதையை வாங்காமலே போய்விடுவார் முதியவர்.

இந்தக் காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்து இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணம் கொட்டையில்லாத பழங்களுக்கான மக்களின் அங்கலாய்ப்பும் அதை விருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் ஆராச்சி முனைப்புக்களுமே.

Wednesday 7 June 2023

அகதியின் பேர்ளின் வாசல்நாவல் பற்றிய என்னுரை.



அடொல்ஃப் ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரந்துபட்ட ஜேர்மன் பிரதேசம், இரண்டு நாடுகளாயின! 

1949 தொடக்கம் 1990 வரை சோவியத்தின் கண்காணிப்பின் கீழே, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் கிழக்குஜேர்மனியும் அமெரிக்கா, பிரான்ஸ், பெரியபிரித்தானியா, ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழே, மேற்குஜேர்மனி என அழைக்கப்பட்ட பிரதேசம் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசாகவும் பிளவுபட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில், 1974 முதல் 1980 வரை, கிழக்கிலும் பின்னர் தொடர்ந்து 1986 இறுதிவரை மேற்கிலும் வாழ்ந்து, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படித்திருக்கிறேன். பணிபுரிந்திருக்கிறேன். அந்தவகையில் எனது கல்வி அங்கு ஜேர்மன் மொழியில் அமைந்திருந்தது. இதன் காரணமாக, முதுகலை மற்றும் முனைவர் (கலாநிதி) பட்டங்களுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை, ஜேர்மன் மொழியிலேயே எழுதினேன்.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்னும் கிழக்குஜேர்மனி, சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றிய ஒரு நாடு. அங்கு கல்வி கற்பவர்கள் பிரதான கல்வியுடன் கம்யூனிச சித்தாந்தங்களையும் கற்கவேண்டுமென்பது பொதுவான விதி. அதற்கமைய கார்ல்மார்க்ஸ் (Karl Marks), ஜேர்மன் மொழியில் எழுதிய 'மூலதனம்' (Das Kapital) என்னும் நூல்முதல், வேறும்பல கம்யூனிச சித்தாந்தங்களை விளக்கும் புத்தகங்களைப் படித்துப் பரீட்சையிலும் சிறப்புச் சித்தி பெற்றிருக்கிறேன்.

பிளவுபட்ட ஜேர்மனிகளுக்கிடையிலே மறைமுகமாக நடந்த பனிப்போர், தனிப்பட்டரீதியில் எனக்கும் சாதகமாக அமைந்தது. கிழக்கு ஜேர்மனியில் தொழில்க் கல்வியுடன் கம்யூனிச பாடங்களில் சிறப்புச் சித்திபெறும் வெளிநாட்டு மாணாக்கர்களுள் சிலரைத் தெரிந்தெடுத்து, முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்பற்றிய மேற்குஜேர்மனி, தங்கள் நாட்டில் மீண்டும் உயர் கல்விகற்கும் வாய்ப்பைக் கொடுத்தது. கிழக்குஜேர்மனியில் படித்த கம்யூனிச சித்தாந்தங்களை  மறக்கவைக்க,  மேற்குஜேர்மனி முன்னெடுத்த மூளைச்சலவையின் செயற்பாடே இது. இதன் நீட்சியாக மேற்குஜேர்மன் ஆளுகைக்குட்பட்ட மேற்குபேர்ளின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (கலாநிதி) பட்ட ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் (ஸ்கொலஷிப்) எனக்குக் கிடைத்தது. கிழக்குஜேர்மனியில் நான் கற்ற சோசலிச, கம்யூனிச படிப்பறிவும் மேற்குஜேர்மனியில் நான் பெற்ற முதலாளித்துவ பட்டறிவும், பிளவுபட்ட ஜேர்மனி பற்றிய பூரண விளக்கத்தை எனக்குத் தந்தது.