இலங்கை அரசியலில் ஏதாவது நல்லது நடக்கும் என்று
நம்பிக்கை வைப்பதும் அது நடக்காமல் போவதும் இப்படித்தான் இருந்துவந்திருக்கிறது.
எனது சொந்த அனுபவம் அப்படி. உங்கள் பலரின் அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்க
வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு
வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்கக்
கூடாது என்று முகநூலிலும்,
வட்ஸ்அப்பிலும்
பலரும் எழுதுவதை வாசிக்கும் போது எனது பங்குக்கு இப்குறிப்பை எழுதலாம் போல்
தோன்றிது.
இதுவரை நடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களில்
மூன்றுமுறைதான் நான் வாக்களித்திருக்கிறேன். இரண்டு முறை எனது வாக்கு வெற்றி
பெற்றிருக்கிறது. இரண்டு முறையும் வாக்காளன் என்றவகையில் நான்
தோல்வியடைந்திருக்கிறேன். மாற்றம் வேண்டும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் அளித்த வாக்குகள் அவை. ஆனால், அவை வீணாக்கப்பட்ட
வாக்குகள் என்று விரைவிலேயே தெரிந்துவிட்டது.
முதல் வாக்கு 1994ல் சந்திரிகா அம்மையாருக்கு அளித்தது. அது ஒரு மாற்றத்துக்கான பேரலை வீசிய காலம். 17 ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை வீழ்த்தி, ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு உறுதிப்பாடு பெரும்பாலான மக்கள் மத்தியிலும், இடதுசாரி ஆர்வலர்கள் மத்தியிலும் மேலோங்கி இருந்த காலம். அந்த உணர்வுக்குத் தலைமை வழங்கியவர் சந்திரிகா. முதல்முதல் ஒரு சிங்கள அரசியல் தலைவர் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக, யுத்தத்துக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக அரசியல் மேடைகளில் பாலமாகக் குரல் எழுப்பினார் என்றால், அது அவர்தான். இதுவரை யாரும் பெறாத அளவு 62% வீத வாக்குகள் பெற்று அவர் ஜனாதிபதியானார். தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. பத்துவருட கால அவருடைய ஆட்சியில் ஜனாதிபதி முறையை அவர் ஒழிக்கவில்லை. யுத்தத்தையும் இனவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. பதிலாக யாழ்ப்பாணத்தை வென்றுவந்த அவரது தளதி வெற்றிப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்ததை மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்...