Thursday 29 February 2024

மரபணு வினாவிடை

 ஆசி கந்தராஜா



ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய முதலாம் சைவ வினாவிடையை நீங்கள் படித்திருக்கலாம். ஏழு அத்தியாயங்களைக் கொண்ட சைவ வினாவிடையின் முதலாம் அத்தியாயம் 'கடவுள் இயல்' பற்றியது. அதிலுள்ள முதலாம், மூன்றாம், ஏழாம் கேள்விகள் இவை.


உலகத்துக்குக் கருத்தா யாவர்?

·         சிவபெருமான்.


சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் என்ன?

·         படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.


சிவபெருமானின் திருக்குமாரர்கள் யாவர்?

·  விநாயகக் கடவுள், வீரபத்திரக் கடவுள், வைரவக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.


விநாயகர் முதல் முருகன் வரை, அனைத்து குமாரர்களும் சிவபெருமானின் பிள்ளைகளா? சிவபெருமான் செய்யுந் தொழில்கள் என்ன? என்ற வினாக்களுக்கு நாவலர் சொன்ன விடைகள் முற்றிலும் சரியானதா? என்ற கேள்விகள் ஒரு சிலரால் இன்றும் கேட்கப்படுகிறன. உமாதேவியார் தனது ஊத்தையை உருட்டியதால் தோன்றியதே பிள்ளையார் என வடஇந்திய நூல்களும் சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறுபொறிகள் ஒன்றுசேர்ந்து ஆறுமுகமாகி முருகக் கடவுளாகியதாக தென்இந்திய புராணங்களும் சொல்கின்றன. இதன்படி பிள்ளையாரும் ஆறுமுகனாகிய முருகனும் கலவிமுறை மூலம் தோன்ற வில்லை, அவர்கள் சிங்கிள் பெற்றேருக்கு குளோனிங் மூலம் பிறந்திருக்கவேண்டுமென வாதிட்டான், என் நாத்திக நண்பனொருவன். இதன்மூலம் குளோனிங் என்னும் நவீன தொழில்நுட்ப முறை நமது சமயத்தில் ஆதிகாலத்திலேயே இருந்ததை ஒத்துக்கொள்ளுகிறாயா? என நண்பனுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்தேன் நான்.

எதுஎப்படியிருந்தாலும் இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆழமானதும் சிக்கலானதுமான பல விஷயங்களை, பாமரர்களும் புரியும் வண்ணம் ஆறுமுக நாவலரால் வேறு விதமாக எழுதியிருக்க முடியாது என்பது எனது அபிப்பிராயம். அந்த வகையில் விவசாய அறிவியல் சார்ந்த விஷயங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ள, நாவலரின் வழியில் வினா விடைகளாகத் தரும் எனது கன்னி முயற்சியே இந்த அறிவியல் புனைவு.

உலகமெங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இவைகளால் ஏற்படும் நீண்டகால பாதிப்புக்களை, பாமர விவசாயிகள் அறிந்திருக்க நியாயமில்லை. காலாதி காலமாக எமக்கு பெருமை சேர்த்த மரக்கறி வகைகளும் தானிய வகைகளும் எமது பிரதேசங்களில் இப்பொழுது சாகுபடி செய்யப்படாதது மட்டுமல்ல, அவை அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன. இத்தகைய பின்னணியில் ஒரு சாமானியன் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு இங்கு பதில் தரப்பட்டுள்ளது.

மரபணு என்றால் என்ன?

·         ஒரு உயிர் அதன் சந்ததிக்குரிய இயல்புகளை, அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை, மரபணு என்கிறோம். மரபணு தாய் தந்தையின் உருவ அமைப்புகளையும் குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

மரபணு மாற்றங்கள் எப்படி நடைபெறுகின்றன?

·         மரபணுமாற்றங்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ நடைபெறலாம். அயல்மகரந்தச் சேர்க்கை மூலம் ஒரு தாவரத்தின் மகரந்தமணி அதேயின இன்னொரு தாவரத்தின் குறிக்கு கடத்தப்பட்டு, சூலகத்தில் கருக்கட்டும்போது இயற்கையான மரபணு மாற்றம் நிகழும். காலாதிகாலமாக வெப்பம் மின்னல் போன்ற இயற்கைப் புறநிலைக் காரணிகளாலும் மரபணுக்கள் விகாரமடைந்து மரபணு மாற்றம் இயற்கையாக நடைபெறலாம்.

 

இதேவேளை நவீன தொழில் நுட்பத்தில் ஆய்வுகூடங்களில் மரபணுக்கள் செயற்கையாக மாற்றப்படுகின்றன. 

 

மரபணு மாற்ற தொழில் நுட்பமென்றால் என்ன?

·         ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள இயல்புகளை (பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல், போன்றவை) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை 'ஜீன்'கள் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் மரபணுக்கள். ஓர் உயிரிலிருந்து நமக்கு தேவையான இயல்புகளைக் கொண்ட மரபணுக்களை பிரித்து, வேறு ஒரு உயிருக்குச் செலுத்தி, அந்த உயிருக்கு புதிய குணாதிசங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்ற தொழில் நுட்பம்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள் என்றால் என்ன?

·         சுற்றுபுற சூழலின் சமனை அழிப்பதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளிலிருந்து வளரும் பயிர்களில் பெறப்படும் விதைகள், மீண்டும் சாகுபடிக்கு பயன் படுத்த முடியாத விதைகளாகவே இருக்கும். இதற்கு ஏற்றவகையில் செயற்கையாக அதன் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். விவசாயிகள் தங்கள் மகசூலில் இருந்து ஒரு பங்கு விதைகளை, அடுத்த சாகுபடிக்கு ஒதுக்கி வைப்பது வழக்கம். அதாவது, நெல் அறுவடை செய்யப்பட்டால், அதில் ஒருபங்கு, விதை நெல்லாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தப்படும். ஆனால் மரபணு மாற்றப்பட்ட மலட்டு விதைகள் மூலம் வளர்க்கப்பட்ட பயிர்களில் இது சாத்தியமில்லை.

காரணம் என்ன?

·         மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல் 'காப்புரிமை' பெற்றுள்ளன. இதனால், ஒவ்வொரு முறையும், அவர்களிடம் இருந்து தான், அந்த விதைகளை வாங்க வேண்டும். பல நிறுவனங்கள், ஒரு படி மேலேசென்று, மரபணுவில் மேலும் பல மாற்றங்களைச் செய்து, மலட்டு விதைகளை உருவாக்கும் பயிர்களை விருத்தி செய்துள்ளன. இவைகள் வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். ஆனால் இந்தப் பயிர்களின், விதைகளைச் சேகரித்து அவற்றை மீண்டும் விதைத்தால் அவை முளைக்காது. இதனால் விவசாயிகள், விதைகளுக்காக எப்போதுமே அந்த நிறுவனத்தையே நம்பி இருக்க வேண்டும்.

பன்னாட்டு விதை வியாபார நிறுவனங்கள் செய்வதென்ன?

·         விதை வியாபார கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளை உலகம் எங்கும் சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த மலட்டு விதைகள் ஒரு முறை மட்டுமே விளைச்சலைக் கொடுக்கும். அந்த வருட விளைச்சலில் விவசாயி சேகரித்த விதைகளை அடுத்த போகம் விதைத்தால் அவை முளைக்காது. அதுமட்டுமல்ல, மலட்டுப் பயிர்களின் மகரந்தம் மற்ற பயிர்களுக்கு சென்று அதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடந்தால், அந்தப் பயிர்களும், இதே போன்ற மலடான விதைகளைத்தான் உற்பத்தி செய்யும்.

பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வதில் இருக்கும் சிக்கல் என்ன?

·         உதாரணத்திற்கு, ஒருவர் பாரம்பரிய முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அடுத்த வயலில், இன்னொருவர் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சாகுபடி செய்தால் பாரம்பரிய முறையில் விளைந்த கத்தரிக்காய் விதைகளிலும், மரபணு மாற்றம் நிகழ்துவிடும்.

எப்படி..?

·         மகரந்தச் சேர்க்கை மூலம் தான், கத்தரிப் பூ, கத்தரிக்காயாக மாறமுடியும். மரபணு மாற்றப்பட்ட கத்தரி வயலில் இருந்து மகரந்த மணிகள், காற்று மூலம் அல்லது தேனீக்கள் மூலம் பாரம்பரிய வயலுக்குப் பரம்பி, மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இதனால் பாரம்பரிய வயலிலும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்கள் தான் உற்பத்தியாகும். ஒரு முறை இப்படி மரபணுக்கள் மாறிவிட்டால், அந்த மாற்றத்தை நீக்க முடியாது.

ஒட்டுமொத்த விவசாயிகளும் பன்னாட்டு கம்பனிகளின் மரபணு மாற்றப்பட்ட விதைகளை வாங்க மறுத்தால்..?

·         இப்படியான ஒரு எதிர்ப்பு நிலை இந்தியாவில் ஏற்பட்டது. விதை நிறுவனங்கள் அசரவில்லை. ஓரு கிராமத்தில் ஒருசில விவசாயிகளுக்கு மூளைச் சலவை செய்து, மரபணு மாற்றப்பட்ட விதைகளை இலவசமாகக் கொடுத்து, விவசாயம் செய்வதற்கான செலவையும் தருவதாக, சில வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டர்கள். அவர்களும் ஆங்காங்கே மரபணுமாற்றப்பட்ட விதைகளை விதைத்துப் பயிர் செய்தார்கள். இவை விளைந்து பாரம்பரிய பயிர்களிலும் பார்க்க அதிக விளைச்சலைக் கொடுத்தது. இதேவேளை இவர்களின் மரபணு மாற்றப்பட்ட பயிர்களிலுள்ள மகரந்த மணிகள், அடுத்த வயலுக்கு பரவிப் பாரம்பரிய பயிர்களின் மரபணுவை மாற்றிவிட்டது. மொத்தத்தில் சில வருடங்களுக்குப் பின்னர், கிராமத்திலுள்ள எல்லா பயிர்களும் கரு முளைகளற்ற, மலட்டு விதைகளையே உற்பத்தி செய்தன. இந்த நிலையில், எல்லா விவசாயிகளும் விதை தானியங்களுக்காக விதை நிறுவனங்களையே தங்கி இருக்கவேண்டி வந்தது.

பன்னாட்டுவிதை வியாபாரிகளின் உள் நோக்கம் என்ன?

·         பசிதான் மானிடத்தின் பொது மொழி. அதுதான் வன்னி விவசாயியை அபுதாபியில் ஒட்டகம் மேய்க்க வைக்கிறது, விவசாயியின் மனைவியை சவூதியில் ஆயா வேலை பார்க்க வைக்கிறது. ஒருவனை பட்டினி போட்டு, உணவுக்காக அவன் இன்னொருவனைச் சார்ந்து வாழும் நிலையை உருவாக்கினால், அவனை இலகுவாக அடிமைப் படுத்திவிடலாம். இதை பன்னாட்டு விதை வியாபாரிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இதனால்தான் இவர்கள்  மலட்டு விதைகளை அறிமுகம் செய்து, விவசாயத்தை சீரழித்து, உணவு உற்பத்திக்குத் தங்களை சார்ந்து நிற்க வைக்கிறார்கள்.

இதற்கு நாம் என்ன செய்யலாம்?

·         எம்மைச் சூழவுள் இயற்கையை முதலில் நாம் நேசிக்கவேண்டும். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாரம்பரிய பயிர்களை, பெருமளவில் சாகுபடி செய்ய வேண்டும்.

சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள், ஒரு மரம் நூறு மனிதர்களுக்குச் சமமென!

ஆசி கந்தராஜா

ஞானம். March 2024





No comments:

Post a Comment