Thursday 15 February 2024

சைவமுட்டை

 

பிரதி புதன்கிழமைதோறும் ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த நிலையில், கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.



வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன். 

தாயின் பாலைக் குடித்து வளரும் பாலூட்டிகளைப் போன்று, கோழிகளிலும் கருக்கட்டாத முட்டைகள் சூலகத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிப்படும். இந்த கருக்கட்டாத கருமுட்டைகள் சேவல் மிதிக்கும்போது வெளிவரும் விந்துகளுடன் சேர்ந்தால், அவை  கருக்கட்டி, கருக்கட்டிய முட்டைகளாக வெளியேறும். சேவலின் விந்துகளுடன் சேராதவை, கருக்கட்டாத முட்டைகளாக உருக்கொள்ளும். இந்த முட்டைக்குள் கரு உயிர் இருக்காது. பேட்டுக் கோழிகளை வெட்டும்போது உள்ளே வட்டவடிவ சின்னச்சின்ன மஞ்சள் நிற முட்டைகள் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். சேவல் கோழி, பேட்டை மிதிக்காவிட்டாலும் இவைகள் கருக்கட்டாத, முழு முட்டைகளாகத் தொடர்ந்து வெளியேறிக்கொண்டேயிருக்கும்.

சும்மா இழுக்காமல் சைவமுட்டை விஷயத்துக்கு வாங்கோ, என்ற கருத்துப்பட குறுஞ்செய்திகள் வானொலி தகவல் பெட்டியில் வந்து குவிந்தன. நீண்ட எனது அறிவியல் தகவல்களால் நேயர்கள் சலிப்படைந்திருக்கவேண்டும். நிகழ்ச்சிக்குப் பொருத்தமான, கொக்கர கொக்கரக்கோ சேவலே என்ற டி.எம் சௌந்தர்ராஜன், ஜிக்கி பாடிய பாடலை ஒலிபரப்பி, எனது அறிவியல் விளக்கத்தைத் தொடர்ந்தேன்.

மனிதர்கள் உட்பட பாலூட்டிகளில், விந்துடன் இணைந்து கருக்கட்டாத முட்டைகள் அழிந்து, மாதவிடாய் காலத்தில் குருதியுடன் வெளிவரும். ஆனால் கோழிகளில் அப்படியல்ல. அவை கருக்கட்டாத, கரு உயிரற்ற முட்டைகளாக வெளியேறும்.

ஊரிலே கோழிக் குஞ்சு பொரிக்க, முட்டைகளை அடை வைக்கிறோம். அப்போது, சில முட்டைகள் குஞ்சு பொரிக்காது கூழாகின்றன. இங்கு கூழாகும் முட்டைகள் கருக்கட்டாத முட்டைகள். குஞ்சு பொரிக்கும் முட்டைகள் கருக்கட்டிய முட்டைகள், என்ற தகவலை தொலைபேசியில் தொடர்புகொண்டு சொன்னார் கொடிகாமத்து தம்பிராஜா. இவர் ஊரில் கோழிப்பண்ணை வைத்திருந்தவராம். நிறைய வாசிப்பதால் ஊர் உலகத்து தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். வானொலி விவாதங்களில் பங்குகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைச் சொல்பவர். அவர் தனது கருத்துக்களைச் சொல்ல தாராளமாக நேரம் கொடுத்தபின்னர் நான் தொடர்ந்தேன்.

கோழிப் பண்ணைகளில் சிறிய கூடுகளில் வளரும் ஆயிரக்கணக்கான பேடுகளை, கிரமமாய் 'விசிற்'பண்ணி சில்மிஷம் பண்ண, சேவல் கோழியால் முடியாது. பண்ணைகளில் சேவல் வளர்க்கப்படுவதும் இல்லை. இதனால் பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகளில் கரு உயிர் இருக்காது. ஆனால் மற்ற எல்லாச் சத்துக்களும், கருக்கட்டிய முட்டைகள் போன்று இருக்கும். பசுவிலிருந்து வரும் பாலுக்கும், பண்ணைகளிலிருந்து வரும் கருக்கட்டாத, கரு உயிர் அற்ற முட்டைகளுக்கும் வித்தியாசமில்லை. இவை பாலைப்போல புரதம், கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய சைவ முட்டைகள், எனச்சொல்லி கோவில் பிரசாத விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தேன் நான்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் எவ்-எம் வானொலிகள், பெரும்பாலும் விளம்பரங்களை நம்பியே இயங்குகின்றன. அன்றைய நிகழ்ச்சியில் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த விளம்பரங்களில் கோழிக்கடை விளம்பரமும் ஒன்று. கோழி இறைச்சி விளம்பரத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள, கலந்துரையாடலை கறிக்கோழி பக்கம் திருப்பியது.  

முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள், கறிக்கோழி இனங்களல்ல. கறிக்கோழி வளர்ப்பில் சேவலாக இருந்தாலென்ன பேடுகளாக இருந்தாலென்ன அவற்றின் சதைதான் முக்கியம். ஆனால் முட்டைக்காக வளர்க்கப்படுக் கோழிக் குஞ்சுகள் எல்லாமே பேடுகளாக வளரவேண்டும். முட்டையிடும் கோழி இனங்களில் சதைவளர்ச்சி இருக்காது. இவற்றை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்தால் பண்ணை வைத்திருப்பவர் திவாலாகிவிடுவார்.

கிராமங்களில் சேவல் கோழிகளையும் முட்டையிட்டு ஓய்ந்த பேட்டுக் கோழிகளையும் டித்தே குழம்பு வைப்பார்கள். ஆனால் கறிக்கோழிகள் எனப்படும் புரொயிலர் கோழிகள் இனவிருத்தி செய்யப்பட்ட பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. காரணம் புரொயிலர்கோழி இனங்கள் 45 நாள்களில் இரண்டு கிலோவரை வளரக்கூடியன. இதற்குமேல் அவற்றின் சதை வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிடும். இதனால் 45 நாள்களுக்கு மேல் கறிக் கோழிகளை வளர்ப்பது இலாபகரமானதல்ல. பண்ணைகளிலிருந்து சந்தைக்குவரும் புரொயிலர் கோழிகள் பெரும்பாலும் நாற்பத்தைந்து நாள்கள் உயிர் வாழ்ந்தவையே!

இவைகள் உயிருடன் வாழ்ந்த நாள்களைவிட உறைகுளிர்ப் பெட்டிகளில் அதிக காலம் இருந்தவை என்பதே உண்மை, என இடையில் புகுந்து கொமன்ட் அடித்தார் நேயர் ஒருவர்.

நகைக்கடை விளம்பரத்தின் பின்னர் விவாதம் தொடர்ந்தது.

32 நாள்களிலேயே இரண்டு கிலோ இறைச்சியை கொடுக்கக்கூடிய கறிக்கோழியை இப்பொழுது இனவிருத்தி செய்துள்ளார்கள். இந்த இனத்துக்கு கோப் (Cobb) என்று பெயர்.

கறிக்கோழிகள், அங்கிங்கு திரும்ப முடியாத சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுவன. அவற்றைக் கூண்டுக்கு வெளியே விட்டால் அவற்றால் ஓடமுடியாது.

32-நாள்களில் இரண்டு கிலோவரை வளரும் கோப் இன கறிக்கோழிகளின் கால்களால் அதன் உடல் பாரத்தை தாங்கமுடியாது. சுருண்டு விழுந்துவிடும். கூண்டுக்குள் இருந்தபடியே தீன் தின்னும் கோழியின் உடல் வளரும் வீதத்துக்கேற்ப இருதயம் வளர்வதில்லை. இதனால் கோழியின் சிறிய இருதயத்தால் பெரிய உடலுக்கு இரத்தத்தைப் பாச்ச முடிவதில்லை.

நாட்டுக்கோழிகள் 45-நாள்களில் கால் கிலோவும் தேறமாட்டது. ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் புறொயிலர் கோழிகள் எப்படி இரண்டு கிலோ நிறைக்குமேல் விருத்தியடைகின்றன? என்பது நேயர் ஒருவரின் நியாயமான கேள்வி.

வளர்ச்சிக்கான ஹோமோன்களை கோழித்தீனுடன் கொடுப்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் குற்றமாகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் கோழித் தீனுடன் ஹோமோன்கள் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. சதை வளர்ச்சிக்கான ஹோமோன்களின் விலை அதிகமாதலால் இது இலாபகரமானதல்ல. ஆனால் புறொயிலர்கோழி இனங்கள் விரைவில் சதைவைக்குமாறு இனவிருத்தி செய்யப்பட்டவை. இவற்றின் உடலுக்குள் விரைவில் சதைவளர்வதற்கான மரபணுக்களுண்டு. இந்த மரபுணுக்கள் நாளொன்றுக்கு 50 கிராமுக்குமேலான சதையை வளர்க்கும்வகையில் ஹோமோன்களை கோழியின் உடலுக்குள் உற்பத்திசெய்யும். கறிக்கோகோழியின் தசைகளில் பாவிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஹோமோன்கள், கோழியை உட்கொள்ளும் மனித உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாமென நம்பப்படுகிறது.

இதனால்தான் பிள்ளைகளுக்கு அதிக கறிக்கோழி கொடுப்பது நல்லதல்ல. பெண்பிள்ளைகள் குறைந்த வயதில் பூப்படைவதற்கு இதுவும் ஒரு காரணம், என்ற குறிப்பை வானொலிக்கு அனுப்பியிருந்தார் பார்வதி அம்மா.

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அம்மா, ஆனால் இன்னமும் இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற பதிலுடன் அன்றைய அறிவியல் விவர்ணத்தை நிறைவு செய்ய முயன்றேன். இதற்காகவே காத்திருந்த சாமி, கோழிமுட்டைகள் வெளிவருவது மலவாசலூடாகவா? என்ற குறும்புத்தனமான கேள்வியொன்றை முன்வைத்தார். இவர் ஒரு சபைகுழப்பி. நிகழ்ச்சியை நிறைவுசெய்யும் நேரத்தில் வானலைக்கு வந்து தொல்லை கொடுப்பவர். இருந்தாலும் அவரது கேள்வி காத்திரமானது என்பதால், மேலும் அழைப்பு வராதிருக்க தொலைபேசிகளைத் துண்டித்துவிட்டு சாமியின் கேள்விக்குப் பதில் சொல்லத் துவங்கினேன்.

பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, 'புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்' (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத்தான் புணர்ச்சியும், கழிவும், முட்டையும் வெளியேறும். சிறுநீர்க் குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், கோழி இட்ட முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக (குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண்டு.

புணர்ச்சி கழிவு பொதுவாயின் உட்பகுதியில் மிகச் சிறிய ஆண், பெண் பால் உறுப்புக்கள் இருக்கும். கோழியில் ஆண்குறி, புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள், சாதாரண நிலையில் சுருண்டிருக்கும். இதனால்தான் சேவல், பேட்டுக்கோழியை மிதிக்கும்போது வாலைப் பதித்து, பேட்டின் செண்டைப்பூவை கொத்தி இழுப்பது. இது பேட்டுக் கோழிக்கு சேவலால் விடப்படும் சிக்னல். ஆனால் வாத்துக்களில் அப்படியல்ல. வாத்தில் ஆண்குறி புணர்ச்சிக் கழிவு பொதுவாய்க்கு வெளியே சற்று நீண்டு துலக்கமாக இருக்கும்.

கோழிகள் சிறுநீர் கழிக்குமா? அதற்கு சிறுநீர்க்குழாய் இருப்பதாகச் சொல்கிறீர்களே என, தனிப்பட்ட எனது முகநூல் மெஸெஞ்சருக்கு சாமியின் குறிப்பு வந்தது. 

கோழி மட்டுமல்ல எல்லாப் பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம், சிறுநீர்க்குழாய் என்பன உண்டு. சிறுநீரில் உள்ள நீர் பறவைகளில் மீண்டும் உடலுக்குள் உறுஞ்சப்படுவதால், சிறுநீர்க்கழிவு திண்மமாகவே வெளியேறும். சுருக்கமாகச் சொன்னால், முட்டை, சிறுநீர், மலம் ஆகியன வெளியேறலும், புணர்ச்சியும், பறவைகளில் நாம் 'மலவாசல்' என்று கருதும், 'புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்' ஊடாகவே நடைபெறும் எனச் சொல்லி, மேலதிக விவாதங்களுக்கு இடம்கொடுக்காது நிகழ்ச்சியை நிறைவு செய்தேன் நான்.

-ஆசி கந்தராஜா-

ஜீவநதி தை 2024

No comments:

Post a Comment