Monday 29 April 2024

வேர்க்கடலை (கச்சான்கடலை) மற்றும் உருளைக்கிழங்கு




வேர்க் கடலை (கச்சான் கடலை) மற்றும் உருளைக் கிழங்கு வேரில் உற்பத்தியாவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா

மீண்டும் உங்களைக் குழப்புகிறேனோ?

வேர்க் கடலைத் தாவரம் நிலத்துக்கு மேலே மெட்டுவிட்டுப் பூத்தாலும் காய்ப்பது நிலத்துக்கு கீழே. பாமரமொழியில் சொன்னால் தரைக்கு மேலே பூக்கள், தரையின கீழே காய்கள் (பழங்கள்). வேர்க்கடலை தாவரம் சுமார் ஒரு அடி உயரம் அடையும் போது கருக்கட்டிய பூக்களிலிருந்து நீளமான கூரான ஆப்பு போன்ற அமைப்பு தோன்றி மண்ணுக்குள் போகும். இந்த ஆப்புகளே வேர்க்கடலையை மண்ணுக்குள் உருவாக்குகின்றன. அதாவது பெயர் வேர்க்கடலை என்றாலும் அவை வேர்களில் தோன்றுவதல்ல. இதனால் வேர்க்கடலை தாவரத்தை மண்ணில் படர விடுங்கள்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள். உண்மைதான். அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக் கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் (Underground stem) என்போம். மண்ணுள் புதைந்திருக்கும் இத்தண்டிலிருந்தே  உருளைக் கிழங்கு உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியை பிடுங்கிப் பார்த்தால் கிழங்குகள் அடித் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருப்பதைக் காணலாம்.

மரவெள்ளியில் வேர்போன பக்கமெல்லாம் வேரிலே கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக் கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை.

No comments:

Post a Comment