Monday, 24 March 2025

சைவமுட்டை


 ஆசி கந்தராஜா

பிரதி புதன்கிழமைதோறும் ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த நிலையில், கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.

வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன். 

Thursday, 20 March 2025


கயர்

கத்தரிக்காய் வாழைக்காய் அல்லது அப்பிளை வெட்டி, சிறிது நேரம் வைத்தால் பழுப்பு நிற கயர் ஊறுவதைக் கண்டிருப்பீர்கள். இது கலங்களுக்கு உள்ளேயிருக்கும் பொலிபீனோல் (Polyphenol) என்னும் வேதிப்பொருள் வெட்டுமுகத்திலிருந்து வெளியேறி காற்றிலுள்ள ஒக்ஸிஜினால் (Oxygen) ஒக்ஸியேற்றப்படுவதால் ஏற்படுவது. இது ஆரோக்கியத்துக்குக் கேடல்ல. தாராளமாகச் சாப்பிடலாம். இதைத் தடுக்க விரும்பினால் வெட்டியவுடன் தண்ணீருக்குள் போட்டுவிடவும்.

உண்மையில் கலங்களுக்குள் இருக்கும் polyphenol is an antioxidant. மனித ஆரோக்கியத்துக்கு தேவயானது.

Sunday, 2 March 2025


ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு:

வாழை நடுத் தண்டில் பொரியல், துவையல் செய்வது இந்தியாவில் பிரபல்யம். வயிற்றுக்கு நல்லதென்பார்கள். இதை இப்போது இலங்கையர்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இலங்கையர்கள் குலைபோட்ட வாழையின் நடுத்தண்டையே பாவிக்கிறார்கள். இது அதிக பயன்தராது.

இந்தியாவில் பழத்துக்காக மட்டுமல்ல இலைக்காகவும் வாழைகள் வளர்க்கப்படுகின்றன. தொடர்ந்து இலைகள் அறுக்கப்பட்ட வாழைகள் வீரியமாகக் குலை தள்ளாது. எனவே இவற்றின் நடுத்தண்டே சந்தைக்கு வரும். இதிலேதான் மனித சௌக்கியத்துக்குத் தேவையான வேதிப்பொருட்கள் அதிகமிருக்கும். குலை தள்ளிய வாழைநடுத்தண்டின் சத்தை, குலை உறிஞ்சிவிட மிகுதி இருப்பது நார்கள் மட்டுமே.

பின் குறிப்பு: வாழைமரம் ஒரு போலித் தண்டு (Pseudo stem). இலைக் காம்புகள் (மடல்கள்) ஒன்று சேர்ந்த அமைப்பையே நாம் தவறாக வாழை மரம் என்கிறோம்.  இதற்கு மேலதிகமாக இங்கு அறிவியல் விளக்கம் வேண்டாம்.


Saturday, 1 March 2025

காலச்சுவடு மார்ச் 2024 மதிப்புரை பொருளாதார அகதிகள்

பொருளாதார அகதிகள்

மதிப்புரை

தொ. பத்தினாதன்

 

அகதியின் பேர்ளின் வாசல்
(
நாவல்)
ஆசி. கந்தராஜா

காலச்சுவடு பதிப்பகம்
669
கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1

பக்.160
ரூ.200

ல்லாக் காலங்களிலும் புலப்பெயர்வுகள் நடந்திருந்தாலும் அவை காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எத்தகைய மாறுபட்ட புலப்பெயர்வாக இருந்தாலும் அதன் மையம் உயிர்வாழ்தல். எல்லா உயிரினங்களும் நிலைத்து நிற்கவும் தன்னுயிர் காக்கவும் எனப் புலப்பெயர்வுக்கும் இடப்பெயர்வுக்கும் தன்னளவில் தயாராகின்றன. அத்தகைய உயிரினங்களின் இயங்கு நிலை அடிப்படையில்தான் மனித சமூகம் தன்னைத் தகவமைத்து வந்திருக்கிறது. மனித சமூகத்தின் இடப்பெயர்வுகளில் பாதகமான நிலைகள் இருந்தாலும் அதன் சாதகமான வகிபாகம் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த மனித சமூக அசைவின் அடிப்படையில் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவலை அணுகலாம்.

இலங்கையில் ஏற்பட்ட போர், கலவரங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கான புலப்பெயர்வுகள் குறித்துப் பல நாவல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் வெளி வந்திருந்தாலும் அவற்றிலிருந்து மாறுபட்ட புலப்பெயர்வை ஆசி கந்தராஜா இந்நாவல் மூலம் வாசகருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்.