புனைவும் சுயமும்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ஒரு இலக்கியப் படைப்பின் வாசிப்பானது, அனுபவம் அறிவு என்ற நிலைகளுக்கு அப்பால் காலம் கடந்தும் உணர்வுகளாக மனதில் சேமிக்கப்படும் போது அதிக பெறுமதி உடையதாகிறது.
அதே சமயம் அந்த உணர்வினைத் தரும் எழுத்தாளர் அதனை புனைவாக மட்டுமே கருதினாரா அல்லது அவரது சுயமும் அங்கு வெளிக்காட்டப்படுகிறதா என்ற சிந்தனை சிலருக்கு தோன்றக் கூடும். இந்த எண்ணம் தவறா சரியா என்பதற்கு அப்பால் யதார்த்தமானது என்றே கொள்ள வேண்டும். அக உலகு புற உலகு இரண்டும் இணைந்த சங்கமமே இலக்கியப் படைப்புகள்.
இதனால்தான் பாலியல் சார்ந்த புனைவுகளை வெளிப்படையாக எழுத பெண் எழுத்தாளர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பு பற்றிய சிந்தனையுடன் அவர் எப்படியான குணநலம் வாய்ந்தவர், எவ்வாறான சந்தர்ப்பத்தில் அல்லது என்ன மனநிலையில் இப்படைப்பினை எழுதியிருப்பார் என்ற சிந்தனையையும் சில சமயங்களில் சேர்ந்தே உருவாதல் தவிர்க்க முடியாதது.
இக் கேள்வியை எனக்குள் ஏற்படுத்தியதும் ஒரு எழுத்தாளர்தான். பேராசிரியரும் தமிழகத்தின் பிரபல எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்கள்.
'திரிவேணி சங்கமம்' என்ற பெயரில் தமிழகத்தின் காலச்சுவடு பதிப்பகத்தால் மறுபதிப்புச் செய்யப்பட்ட , எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின் குறுநாவல் தொகுதியின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
