Thursday 4 April 2024

வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் காசிநாதன், இருபது வருடங்களுக்கு மேலாக மெல்பேர்னில் வாழ்கிறார். இருந்தாலும் பொதுவெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர் இந்திரபாலா. இவர் இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட வரலாற்றாசிரியர், தொல்பொருள் ஆய்வாளர். இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து மறைந்த தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். எமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் 'எல்லோருக்கும் எல்லாம் தெரியும்' என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

கலாநிதி காசிநாதனுடன் நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் பேசுவது உவப்பானது. பல விஷயங்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம். சமீபத்தில் அவருடன் பேசியபோது, தனது பின் வளவில் செழிப்பாக வளர்ந்த வாழையொன்று ஐந்து சீப்பில் குலை தள்ளியிருப்பதாகச் சொன்னார்.

அப்படியா? என நான் ஆச்சரியப்பட்டேன். ஐந்து சீப்பில் வாழை, குலை தள்ளுவது ஒன்றும் புதினமில்லை. ஆனால் அவர் வாழும் குளிர்கூடிய மெல்பேர்னில் அது ஆச்சரியம்தான்.

அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, கண்டமும்கூட! இங்கு வெப்ப வலயம், உபவெப்ப வலயம், குளிர் வலயம் என மூன்று மண்டலங்களும் உண்டு. பூமத்தியரேகைக்கு கீழே, பூமிப்பந்தின் தென் முனைப் பக்கமாக அவுஸ்திரேலியா அமைந்திருக்கிறது. இதனால் பூமத்தியரேகைக்கு மேலே இருக்கும் நாடுகளுக்கு, அவற்றின் குளிர் காலங்களில் விவசாய உற்பத்திகளைப் பெருமளவு ஏற்றுமதி செய்யமுடியும். இதுவே இந்த நாட்டுப் பொருளாதார வெற்றியின் சூக்குமம் எனச் சொல்வார்கள்.

இந்தவகையில் பலதும் பத்தும் பேசிய காசிநாதன் சுழன்றடித்து மீண்டும் வாழைக்குலை விஷயத்துக்குவந்து, வாழைப்பழம் நிறைய, மொட்டைக்கறுப்பன் நெல்லு சைஸில், கறுத்தக் கொட்டைகள் இருக்குதடாப்பா, எனச் சொல்லிச் சிரித்தார்.

காலாதிகாலமாக, எமக்குத் தெரிந்த வாழைப்பழத்தில் விதைகள் இல்லை. அன்னாசியிலும் இல்லை. பிற்காலங்களில் இனவிருத்தி செய்யபட்ட திராட்சை, தர்பூசணி, பப்பாளியிலும் விதைகள் இல்லை. இதுபற்றிய விபரம் அறியவே காசிநாதன் என்னைத் தொடர்பு கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் தனது துறை சார்ந்த நூல்கள், மட்டுமல்ல அதற்கு வெளியேயும் நியை வாசிப்பவர். அதனால் அறிவியல் ரீதியாக அவருக்கு விளக்கம் சொன்னேன்.

'இருமடிய' (Diploid) தாவரங்களில் விதைகள் இருக்குமென்றும் 'மும்மடிய' (Triploid) தாவரங்கள் விதைகளற்ற பழங்களைக் கொடுக்குமென்றும், அவரது வாழை 'இருமடிய' வாழை என்றும் சொன்னதும் அவர் சட்டெனப் புரிந்துகொண்டார்.

சமையல் அறையில் மொந்தன் வாழைக்காயைப் பொரிக்கவென தோல் சீவிக்கொண்டிருந்த என்னுடைய மனைவிக்கு, எமது தொலைபேசி உரையாடல் கேட்டிருக்கவேண்டும். தொலைபேசி உரையாடல் முடிந்ததும், வாழைக்காயும் கத்தியுமாக என்முன் வந்தமர்ந்து, இதைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்கோ என்றார்.

ஒரு உயிரினம் எப்படி அமையவேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் கலத்தினுள்ளே (Cell) நூல் போன்ற அமைப்புடைய குரோமசோம்களில் (நிறமூர்த்தம்) பதியப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் சோடிசோடியாக இருக்கும். இவற்றை இருமடிய தாவரங்கள் என்போம். உலகில் பெரும்பாலானவை இந்த வகையே. இதேவேளை மூன்று நிறமூர்த்தங்கள் சேர்ந்திருந்தால் அவை மும்மடியம் எனப்படும்.

இரண்டடுக்கு குரோமசோம் கொண்ட இருமடிய தாவரங்களில் விதைகள் இருக்கும். அற்றை மூன்றடுக்கு குரோமசோம்கள் கொண்ட தாவரங்களாக மாற்றிவிட்டால், அவைகள் விதைகளற்ற காய் கனிகளைக் கொடுக்கும், அப்படித்தானே? என, எனது விளக்கத்தை இலகுவாக்கினாள் மனைவி. அவளும் அடிப்படை உயிரியல் விஞ்ஞானம் படித்தவள்.

உண்மைதான். ஆதிகாலத்தில் எல்லா வாழைப் பழத்துக்கும் விதைகள் இருந்தன. அவை இன்றும் காடுகளிலும் மலைகளிலும் வளர்கின்றன. அதிலொன்றுதான் காசிநாதன் வீட்டு பின்வளவில் குலைபோட்ட வாழை.

ஓஹோ...!

கால ஓட்டத்தில் விதைகொண்ட வாழைகள் இன விருத்தியடைந்து விதைகளற்றவை ஆகின.

எப்படி? இயற்கையாகவா செயற்கையாகவா?

அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் அல்லது இடி, மின்னல், வெப்பம் காரணமாக மிகமிக நீண்ட காலங்களுடாக, மூன்றடுக்கு குரோமசோம்கள் கொண்ட, விதைகளற்ற வாழைகள், இயற்கையாக விருத்தியடைந்தன.

மற்றத் தாவரங்களில்?

அவை செயற்கை முறையில் குறுகிய காலத்துக்குள் மாற்றப்படடவை. தர்பூசனி, பப்பாளி போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள்.

அப்போ, விதைகளற்ற தாவரங்களின் இனப்பெருக்கம்?

பதியமுறைகளின் மூலம்தான். ஆனால் பப்பாளி, தர்பூசனி ஆகியனவற்றின் (மும்மடிய) விதைகளை வியாபார நிலையங்களில் வாங்கலாம். அவற்றிலிருந்து வளரும் தாவரங்கள், காய்கனிகளைக் கொடுக்கும். ஆனால் அவற்றில் விதைகள் இருக்காது.

என்ன அதிசயமாய் இருக்கு. அவங்கள் விதை விக்கிறாங்கள். ஆனால் அற்றிலிருந்து வளர்பவை விதைகளைக் கொடுக்காது? இது கொஞ்சமும் லொஜிக்காக இல்லையே!

 


உண்மைதான். உதாரணத்துக்கு தர்பூசணியை எடுப்போம் இதன் விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம், நாலடுக்கு (Tetraploid) குரோமசோம்கள் கொண்ட தர்பூசணித் தாவரம் இருக்கிறது. பெரும் பணம் செலவு செய்து, அதை ஆராச்சி முலம் விருத்தி செய்திருப்பார்கள். இது அவர்களின் பணம்காய்க்கும் மரம். இதை அவர்கள் வெளியில் விடமாட்டார்கள். இதனுடன் இரண்டடுக்கு குரோமசோம்கள் (இருமடியம்) கொண்ட சாதாரண தர்பூசணியை, மகரந்தச் சேர்கை மூலம் கலப்பார்கள்.

ஓ...!

இக்கலப்பின் மூலம் உருவாகும் தாவரம், விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகளைத்தான் விவசாயிகளுக்கு விற்பார்கள்.

இந்த விதைகளை விதைத்தால்?

அவை முளைத்து, வளர்ந்து பழம் கொடுக்கும். ஆனால் அதில் விதைகள் இருக்காது. இதுதான் நாமெல்லோரும் விரும்பும் சீட்லெஸ் தர்பூசணி! இது ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்கள், உலக விவசாயத்தியில் செலுத்தும் ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.

எனது இந்த விளக்கம் மனைவிக்குப் புரியவில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. இதிலும் இலகுவாக என்னால் இந்த விஷயத்தைச் சொல்ல முடியவில்லை.

உலகம் அழியப்போகுது. வேறொன்றுமில்லை எனக் கொமன்ற் அடித்த மனைவி, வாழைக்காய் பொரிக்க சமையல் அறைக்குள் புகுந்தாள்.

குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பெரும் தோட்டங்களில் விளைந்த வாழைப்பழங்கள் நியாயமான விலைக்கு இங்கு கடைகளில் வாங்கலாம். இதனால் பழத்துக்காக பின்வளவில் நான் வாழை நடுவதில்லை. பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் கறிவாழைக் காய் சாப்பிடாததால் அது பெருந்தோட்டங்களில் பயிரிடப்படுவதில்லை. அவ்வப்போது பிஜி நாட்டிலிருந்து இது இறக்குமதியானாலும் கடும் விலைகொடுத்தே வாங்கவேண்டும். இதனால் கொல்லைப்புறத் தோட்டத்தில் நான் நட்டு வளர்ப்பது கறிமொந்தன் வாழைகளே. நான் வாழும் சிட்னி, உப வெப்பமண்டலப் பிரதேசமாதலால் வாழைகள் செழித்து வளர்ந்து குலை தள்ளும். சென்ற வாரம்தான் ஒரு சாம்பல் மொந்தன் வாழைக்குலை வெட்டி உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டோம். குலை வெட்டும்போது தவறுதலாக குலை தள்ளாத வாழை மரம் ஒன்றும் முறிந்துவிட்டது. அதன் நடுத் தண்டை எடுத்துக் கறி சமைப்பது அம்மாவின் நோக்கம். வயித்துக் குழப்படிக்கு வாழைத் தண்டுத் துவையல் நல்ல சாமான் என்பது அம்மாவின் வாகடம். இணையத்தளத்தில் தானும் இதை வாசித்ததாக மனைவியும் வழிமொழிந்ததால் வாழைத்தண்டு விஷயத்துக்கு இனி அப்பீல் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனவே கொடுவாக் கத்தியுடன் வாழைமரங்கள் வளர்ந்து நின்ற பின்வளவு மூலைக்குப் போனேன். அம்மாவும் எட்டாம் வகுப்புப் படிக்கும் மூத்த பேத்தியும் கூட வந்தார்கள்.

எங்கள் வாழைப் பாத்தியில் நின்ற இன்னொரு வாழை, குலை தள்ளி, பொத்தி கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தது. பொத்தியின் ஒருமடல் விரிந்து பிஞ்சுகள் வெளியே தெரிந்தன.

இதைக்கண்ட பேத்தி, மகரந்த மணிகள் சூலகத்தின் குறிக்கு கடத்தப்படுவதே மகரந்தச் சேர்க்கை என்றும், இதன் மூலம் கருக்கட்டி காய் தோன்றுகிறது எனவும் உயிரியல் பாடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் வாழைப் பொத்தி(பூ) விரியும்போதே காய் வருகிறதே என, ஒரு அறிவுபூர்வமான கேள்வியைக் கேட்டு அசத்தினாள்.

பொத்தி விரிந்து ஒரு சீப்புக் காய் வெளியே வந்த நிலையிலிருந்த வாழைப் பொத்தியை முறித்து, அவளுக்கு செயல் முறையில் விளக்க ஆரம்பித்தேன். பொத்தியை முறித்தது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பது அவரின் முகத்தில் தெரிந்தது. அது பூட்டப் பிள்ளைக்காக என்பதால் மௌனமாக இருந்தார்.

வாழை பொத்தி ஒரு மாறுபட்ட பூங்கொத்து. இதில் ஆண்பூக்களும் பெண்பூக்களும் இருக்கும். பொத்தியின் மடல் விரியும்போது முதலில் சீப்புச்சீப்பாக வருவது பெண்பூக்ள். பெண்பூவில் சூல்ப்பையும், சூல்முட்டையும் இருந்தாலும், அது கருத்தரிப்பது இல்லை. வாழையில் மகரந்த சேர்க்கை இல்லாமலேயே வாழைக் காய்கள் உற்பத்தியாகின்றன.

ஒஹோ, இதாலைதான் பொத்தியின் மடல் விரிய, காயும் வெளியிலை வாறார், எனச் சொல்லிச் சிரித்தாள் பேத்தி.

உண்மைதான். வாழையில் மகரந்தச் சேர்க்கையும் கருக்கட்டலும் நடைபெறாததால், வாழைக் காயில் விதைகள் இல்லை. இதை 'பார்த்தினோகார்பி' (Parthenocarpy) என்று அழைக்கப்படுகிறது. பெண் பூக்கள் வந்து முடிந்தபின் வருவன, ஆண் பூக்கள். இவைக்கு அங்கு வேலை இல்லாததால் உதிர்ந்துவிடும் என்று விளக்கி, பொத்தியின் மடல்களை அடுக்கடுக்காக விரித்து, ஆண் பூக்களைக் காட்டினேன்.

ஒரு முறை பொத்தி தள்ளி குலை போட்டதும் வாழைமரம் மடிந்துவிடுகிறதே, மற்ற மரங்களைப் போல அடுத்தடுத்து குலைபோட்டால் என்ன? - இது பேத்தியின் நியாயமான கேள்வி.

முதலில் நீ சொன்ன 'மரம்' என்ற பதம் வாழையைப் பொறுத்த வரையில் தப்பு. வாழை மரம் என்பது போலி என விளக்கி, சரிந்து கிடந்த வாழைக் குத்தியின் மடல்களை, துச்சாதனன் துகில் உரிவதுபோல கழட்டத் துவங்கினேன். இறுதியில் எதுவுமே அங்கு எஞ்சவில்லை.

பார்த்தாயா, வாழை மரம் என்பது வாழை மடல்கள் ஒன்று சேர்வதால் உருவான போலித்தண்டு (Pseudo stem). பெரும்பாலான செடியினங்களில் தண்டுப் பகுதி மண்ணுக்கு வெளியே, சூரிய வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டும் வளர்கிறது. வெளியில் செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி, இலைக் காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றின்மேல் ஒன்று பற்றிநிற்பதால் உருவாகிய பகுதியாகும். வளர்ந்த செடியில் இவற்றின் ஊடே, நடுவில் சற்றே உறுதியான நாராலானது போலத் தோன்றும் தண்டுப் பகுதி மலர்க் காம்பாகி, காலக் கிரமத்தில் குலையாக வெளியே வரும். பொதுவாக ஒருமுறை குலை போட்டதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். புதிய கன்றுகள் கிழங்கிலிருந்து தோன்றி வளர்ந்து குலை தள்ளும் என விளக்கினேன்.

உண்மைதான், மற்றவர்களுக்கு பயன் கொடுத்துத் தன்னை அழிப்பதுதான் வாழையின் பண்பு, என ஒரு தத்துவ விளக்கத்தை அவிட்டுவிட்டார் அம்மா.

2012

-ஆசி கந்தராஜா-

 

 

No comments:

Post a Comment