Monday 29 April 2024

வேர்க்கடலை (கச்சான்கடலை) மற்றும் உருளைக்கிழங்கு




வேர்க் கடலை (கச்சான் கடலை) மற்றும் உருளைக் கிழங்கு வேரில் உற்பத்தியாவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா

மீண்டும் உங்களைக் குழப்புகிறேனோ?

வேர்க் கடலைத் தாவரம் நிலத்துக்கு மேலே மெட்டுவிட்டுப் பூத்தாலும் காய்ப்பது நிலத்துக்கு கீழே. பாமரமொழியில் சொன்னால் தரைக்கு மேலே பூக்கள், தரையின கீழே காய்கள் (பழங்கள்). வேர்க்கடலை தாவரம் சுமார் ஒரு அடி உயரம் அடையும் போது கருக்கட்டிய பூக்களிலிருந்து நீளமான கூரான ஆப்பு போன்ற அமைப்பு தோன்றி மண்ணுக்குள் போகும். இந்த ஆப்புகளே வேர்க்கடலையை மண்ணுக்குள் உருவாக்குகின்றன. அதாவது பெயர் வேர்க்கடலை என்றாலும் அவை வேர்களில் தோன்றுவதல்ல. இதனால் வேர்க்கடலை தாவரத்தை மண்ணில் படர விடுங்கள்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள். உண்மைதான். அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக் கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் (Underground stem) என்போம். மண்ணுள் புதைந்திருக்கும் இத்தண்டிலிருந்தே  உருளைக் கிழங்கு உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியை பிடுங்கிப் பார்த்தால் கிழங்குகள் அடித் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருப்பதைக் காணலாம்.

மரவெள்ளியில் வேர்போன பக்கமெல்லாம் வேரிலே கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக் கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை.

Thursday 4 April 2024


அப்பிள் இலங்கையின் உலர்வலயத்தில் பூத்துக் காய்க்குமா?

இல்லை என்பதே இதற்கான பதில்.

நல்ல இன அப்பிள் விதைகளை ஐரோப்பாவில் வாங்கிச் சென்று இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விதைத்து வளர்க்கும் முயற்சியில் சிலர் முயன்றுள்ளதாக அறிகிறேன். இவர்களின் ஆர்வத்தைப் பாராட்டும் அதேவேளை, ஐரோப்பிய அப்பிள் இனங்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில கிளைவிட்டு வளர்ந்தாலும் அவை ஒருபோதும் மொட்டரும்பி பூத்துக் காய்க்காது. வீணாக நட்டமடையாதீர்கள்!

அப்பிள் மரங்கள் கடும்குளிர் சுவாத்தியத்துக்கே உரித்தான பயிர்.

விஞ்ஞானரீதியாக பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை (Low Chill – பீச், பிளம்ஸ்), நிறைகுளிர் வகை (High Chill -அப்பிள்), குளிர் தேவையற்ற வகை (No Chill - மா பலா).

தாவர உடற் கூறு இயல்பின்படி அப்பிள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் (freezing temperature hours) தேவை.

எனவே ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளை, இலங்கையின் வெப்மான வலயத்தில் வளர்த்தால் அவை கிளைவிட்டு வளரும் ஆனால் பூத்துக்காய்க்காது.

அப்பிள் மரங்கள் வின்ரர் (Winter) காலங்களில் இலைகளை முற்றாக இழந்து அதன் நுனி மொட்டுக்கள் உறைந்துபோய் இருக்கும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் Winter காலங்களில் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் அப்பிளுக்குத் தேவை. பின்னர் வசந்த காலங்களில் (Spring) வெப்பநிலை கூட மொட்டுக்கள் அரும்பி பூவாகி காய்க்கத் துவங்கும். குறிப்பாகச் சொன்னால் வின்ரரில் கிடைத்த உறைகுளிர் நிலையின்போது, அப்பிள் தாவரத்தின் கலங்களுக்கு உள்ளே மொட்டரும்பி பூப்பதற்கான  ஹோமோன் ஆயத்தங்கள் நடக்கும். (உறைகுளிர் கிட்டத்தட்ட 5 பாகை சதமளவுக்கு (C) கீழே. இது அப்பிள் இனத்துக்கு இனம் மாறுபடும்).

இந்தியா காஸ்மீரில் வளரும் அப்பிள், குறை குளிர் வகை (Low chill variety). அவை நுவரெலியாவின் மலை உச்சிகளில் காய்க்கும். ஆனால் ஐரோப்பிய வகை பூக்காது, காய்க்காது.

இதே போல, நுவரேலியாவில் நன்கு வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் நன்கு பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

ஆசி கந்தராஜா. சிட்னி.

 


வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் காசிநாதன், இருபது வருடங்களுக்கு மேலாக மெல்பேர்னில் வாழ்கிறார். இருந்தாலும் பொதுவெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர் இந்திரபாலா. இவர் இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட வரலாற்றாசிரியர், தொல்பொருள் ஆய்வாளர். இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து மறைந்த தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். எமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் 'எல்லோருக்கும் எல்லாம் தெரியும்' என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

கலாநிதி காசிநாதனுடன் நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் பேசுவது உவப்பானது. பல விஷயங்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம். சமீபத்தில் அவருடன் பேசியபோது, தனது பின் வளவில் செழிப்பாக வளர்ந்த வாழையொன்று ஐந்து சீப்பில் குலை தள்ளியிருப்பதாகச் சொன்னார்.

அப்படியா? என நான் ஆச்சரியப்பட்டேன். ஐந்து சீப்பில் வாழை, குலை தள்ளுவது ஒன்றும் புதினமில்லை. ஆனால் அவர் வாழும் குளிர்கூடிய மெல்பேர்னில் அது ஆச்சரியம்தான்.

அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, கண்டமும்கூட! இங்கு வெப்ப வலயம், உபவெப்ப வலயம், குளிர் வலயம் என மூன்று மண்டலங்களும் உண்டு. பூமத்தியரேகைக்கு கீழே, பூமிப்பந்தின் தென் முனைப் பக்கமாக அவுஸ்திரேலியா அமைந்திருக்கிறது. இதனால் பூமத்தியரேகைக்கு மேலே இருக்கும் நாடுகளுக்கு, அவற்றின் குளிர் காலங்களில் விவசாய உற்பத்திகளைப் பெருமளவு ஏற்றுமதி செய்யமுடியும். இதுவே இந்த நாட்டுப் பொருளாதார வெற்றியின் சூக்குமம் எனச் சொல்வார்கள்.

இந்தவகையில் பலதும் பத்தும் பேசிய காசிநாதன் சுழன்றடித்து மீண்டும் வாழைக்குலை விஷயத்துக்குவந்து, வாழைப்பழம் நிறைய, மொட்டைக்கறுப்பன் நெல்லு சைஸில், கறுத்தக் கொட்டைகள் இருக்குதடாப்பா, எனச் சொல்லிச் சிரித்தார்.

காலாதிகாலமாக, எமக்குத் தெரிந்த வாழைப்பழத்தில் விதைகள் இல்லை. அன்னாசியிலும் இல்லை. பிற்காலங்களில் இனவிருத்தி செய்யபட்ட திராட்சை, தர்பூசணி, பப்பாளியிலும் விதைகள் இல்லை. இதுபற்றிய விபரம் அறியவே காசிநாதன் என்னைத் தொடர்பு கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் தனது துறை சார்ந்த நூல்கள், மட்டுமல்ல அதற்கு வெளியேயும் நியை வாசிப்பவர். அதனால் அறிவியல் ரீதியாக அவருக்கு விளக்கம் சொன்னேன்.

Thursday 29 February 2024

மரபணு வினாவிடை

 ஆசி கந்தராஜா



ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய முதலாம் சைவ வினாவிடையை நீங்கள் படித்திருக்கலாம். ஏழு அத்தியாயங்களைக் கொண்ட சைவ வினாவிடையின் முதலாம் அத்தியாயம் 'கடவுள் இயல்' பற்றியது. அதிலுள்ள முதலாம், மூன்றாம், ஏழாம் கேள்விகள் இவை.


உலகத்துக்குக் கருத்தா யாவர்?

·         சிவபெருமான்.


சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் என்ன?

·         படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.


சிவபெருமானின் திருக்குமாரர்கள் யாவர்?

·  விநாயகக் கடவுள், வீரபத்திரக் கடவுள், வைரவக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.


விநாயகர் முதல் முருகன் வரை, அனைத்து குமாரர்களும் சிவபெருமானின் பிள்ளைகளா? சிவபெருமான் செய்யுந் தொழில்கள் என்ன? என்ற வினாக்களுக்கு நாவலர் சொன்ன விடைகள் முற்றிலும் சரியானதா? என்ற கேள்விகள் ஒரு சிலரால் இன்றும் கேட்கப்படுகிறன. உமாதேவியார் தனது ஊத்தையை உருட்டியதால் தோன்றியதே பிள்ளையார் என வடஇந்திய நூல்களும் சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறுபொறிகள் ஒன்றுசேர்ந்து ஆறுமுகமாகி முருகக் கடவுளாகியதாக தென்இந்திய புராணங்களும் சொல்கின்றன. இதன்படி பிள்ளையாரும் ஆறுமுகனாகிய முருகனும் கலவிமுறை மூலம் தோன்ற வில்லை, அவர்கள் சிங்கிள் பெற்றேருக்கு குளோனிங் மூலம் பிறந்திருக்கவேண்டுமென வாதிட்டான், என் நாத்திக நண்பனொருவன். இதன்மூலம் குளோனிங் என்னும் நவீன தொழில்நுட்ப முறை நமது சமயத்தில் ஆதிகாலத்திலேயே இருந்ததை ஒத்துக்கொள்ளுகிறாயா? என நண்பனுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்தேன் நான்.

எதுஎப்படியிருந்தாலும் இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆழமானதும் சிக்கலானதுமான பல விஷயங்களை, பாமரர்களும் புரியும் வண்ணம் ஆறுமுக நாவலரால் வேறு விதமாக எழுதியிருக்க முடியாது என்பது எனது அபிப்பிராயம். அந்த வகையில் விவசாய அறிவியல் சார்ந்த விஷயங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ள, நாவலரின் வழியில் வினா விடைகளாகத் தரும் எனது கன்னி முயற்சியே இந்த அறிவியல் புனைவு.

Thursday 15 February 2024

சைவமுட்டை

 

பிரதி புதன்கிழமைதோறும் ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த நிலையில், கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.



வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன். 

Wednesday 7 February 2024

சயந்தனின் ஐமிச்சங்கள்.

 

ஐமிச்சம் 1:

பூக்காமல் காய்க்கும் மரமெது?

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி எதையும், சயந்தன் தவற விடுவதில்லை. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூக்காமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது. சயந்தனும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை. அவனது ஆச்சியும் அது உண்மைதான் என எண்பித்தார். இது எப்படிச் சாத்தியம்? என அறிய, மாகாண விவசாய அதிகாரியாகப் பணிபுரிந்த வேதவல்லி அக்காவைக் கேட்டான்.

பலா பூக்குமடா, எவர் சொன்னவர் பூக்காதென்று? பலாவின் பூக்கள் பச்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறுவேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல்க் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்'.

பெண் பூக்கள்?

Thursday 1 February 2024

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் -1998

(பேட்டி / நேர்காணல்)


ஸ்திரேலியா, சிட்னி ‘தமிழ் முழக்கம்’ வானொலிக்காக ஆசி.கந்தராஜா அவர்கள் 1998ம் ஆண்டு நடிகர் நாகேஷ் அவர்களுடன் கண்ட பேட்டியின் எழுத்து வடிவம்.


வானொலி: வணக்கம் நாகேஷ் சார்…

நாகேஷ்: வணக்கம் சார்…


வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?

நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்… இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு.


வானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்…

நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க


வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்…

நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப…..கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய…


வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?

நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன்…, சார் உங்களுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?


வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?

நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.


வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

Monday 2 October 2023

பூக்களுக்கும் பூக்களுக்கும் கல்யாணமாம் கல்யாணம்..!

-ஆசி கந்தராஜா-

சிட்னியில் இப்போ வசந்த காலம்.

இன்று 2 October 2023, ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரச விடுமுறை. உலகமெங்கும் மே மாதம் 1ம் திகதி தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும்போது, ஏன் நியூ சவுத் வேல்ஸ்ஸில் இன்று விடுமுறை எனக் கேட்க்காதீர்கள். இங்கு இப்படித்தான்.

என்னுடைய மனைவி மெல்பனில் வசிக்கும் மகள் வீட்டுக்குப்போக, நான் சோம்பலை அடைகாத்து, வீட்டில் பொழுதைப் போக்கினேன். காலை பத்து மணி இருக்கும். கைத்தொலைபேசி சிணுங்கியது. மறு முனையில் செல்லத்துரை அண்ணை.

இண்டைக்கு வீட்டிலை நண்டுக்கறி தம்பி, மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திட்டுப் போவன், என படு கரிசனையாக அழைத்தார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் தங்கம்மா அக்காவின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் காரமான நண்டுக்கறியை நினைத்ததும் நாக்கில் ஜலம் ஊறியது. அடுத்த அரை மணி நேரத்தில் செல்லத்துரை அண்ணை வீட்டில் ஆஜரானேன்.

நண்டுக்கறி மூக்கைத் துளைத்தது. தங்கம்மா அக்கா நண்டுக்கறிக்குத் தோதாக குசினியில் முருங்கை இலைச் சொதி வைத்துக்கொண்டு நின்றார்.

பின் வளவில்,  நட்ட கண்டுகளுக்குத் தண்ணிர் விட்டபடி, இஞ்சாலை வாதம்பி, எனக் குரல் கொடுத்தார் செல்லத்துரை அண்ணை.

Thursday 21 September 2023

 

 

“... , சோனியின் வெற்றியைக் கண்டால் ஏற்காது”

 - திரு அப்துல் ஹமீட் -



ஆசி கந்தராஜா - திரு அப்துல் ஹமீட் செவ்வி பற்றி, வானொலியாளர், கவிதாயினி, சமூக செயற்பாட்டாளர் சௌந்தரி கணேசன் எழுதி, ஆசிமுற்றம் இணையத் தளத்தில் பிரசுரமாகும் எதிர்வினை.

-சௌந்தரி கணேசன்-

செவ்வியை செவிமடுத்தேன். உங்களது கேள்விகளுக்குள் உள்ள சிறப்பான நோக்கத்தைக் காணமுடிகிறது. இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளை உருவாக்குவதை பார்க்கின்ற போது மிகவும் சங்கடமாகவுள்ளது. விளக்கங்களை மறுத்து, பேச்சில் வெறுப்பை உமிழும் திரு அப்துல் ஹமீத் அவர்கள், உங்கள் கேள்வியின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறாரோ தெரியவில்லை. செவ்வி என்பது தனிமனிதனின் புகழை மட்டும் பரப்புவதாகவோ பகிர்வதாகவோ இருக்காது நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு நேயரும் இதே கேள்வியைக் கேட்க விரும்பியிருப்பார் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.  நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே விலகி நிற்கும் ஒவ்வாமை திரு அப்துல் ஹமீத்தின் உடல் மொழியில் நிலையாகக் குடி கொண்டிருந்ததையும் தெளிவாக உணரமுடிகிறது.

ஒருவரின் கருத்து ஏற்பிற்குரியதா அல்லது விமர்சனத்திற்குரியதா என்பது வேறு, ஆனால் உரையாடலின் முறைமையை தன் வசதிக்கேற்ப எத்தருணத்திலும் வளைத்து விடக்கூடாது. 

“...சோனியின் வெற்றியைக் கண்டால் ஏற்காது” 

- என்று போகிற போக்கில் அடித்து விட்டுப் போவதற்கு திரு அப்துல் ஹமீத் அவர்களுக்கு அசாத்தியத் துணிவு வேண்டும். எவ்வளவு காலம் சென்றாலென்ன, எவ்வளவுதான் சிந்தனையில் வளர்ச்சி டைந்தாலென்ன, அடிப்படையான மனக்காழ்ப்பு இல்லாமல் அந்த வார்த்தை வெளிவராது. ஒற்றைப் படையான, குத்து மதிப்பான உளப் பதிவின் மூலம், தர்க்க அடிப்படை ஏதும் இன்றி தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கின்றார், திரு அப்துல் ஹமீத் அவர்கள்.  உங்களைத் தாக்கும் வெறியில், அல்லது உங்களை எதிர்க்கும் வகையில் மிக எளிதாக ஒட்டுமொத்தச் சமூகத்தையே எதிர்ப்பக்கம் தள்ளிவிடுகிறார். அவரது இந்தக் கூற்றை அல்லது அவரது இந்த உளப்பதிவை வெறும் கோவம் என்று நிராகரிப்பது மிகவும் கடினம். 

தட்டையான சிந்தனைகளில் அழுந்திப்போயிருக்கும் சமூகப்பரப்பில் ஒரு அசல் படைப்பை முன்வைப்பது என்பது மிகவும் சிக்கலானது. ஆனாலும் நீங்கள் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறீர்கள். மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறேன். சில இடங்களில் உங்களது சங்கடங்களைப் பார்க்கும் போது மனம் இளகுகின்றது. இதே பாதிப்பு அறிவிப்பாளர் திரு அப்துல் ஹமீத்தின் அபிமானிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஓர் செவ்வி நடைபெறும்போது அடிப்படை மரியாதை அத்தளத்தில் நிலவவேண்டும். இருவருக்கும், இருவரதும் கல்வி, நுண்ணுணர்வு, நேர்மை மீதான நம்பிக்கை இருக்கவேண்டும். மட்டம் தட்டுவதில் வெற்றி காணும் செவ்விகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல செவ்வியென்பது இருதரப்புக்கும் நலமளிக்கவேண்டும். கவனிப்பவர்களுக்கும் பயனளிக்கவேண்டும். ஆனால் இந்தச் செவ்வியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அவசரப்பட்டுச் சிந்திப்பதும், சிந்தனையில் நிதானம் இல்லாததும், தன்னை மையமாக்கி வைத்துப் பேசுவதும் எரிச்சலடைய வைக்கிறது. இதை எனது பொது அவதானமாக முன்வைக்கின்றேன். எந்தக் காரணத்திற்காகவும் எனது கருத்துக்களை பதுங்கியும் மழுப்பியும் சொல்ல வேண்டிய அவசியம் என்னிடம் இல்லை என்பதையும், கடந்த 25 ஆண்டுகளாக  ஊடகவியலாளராகப் பணியாற்றும் அனுபவத்திலும் இதை என்னால் பதிவுசெய்ய முடிகிறது. 

மதிப்பீடு என்பது பெரும்பாலும் அதை முன்வைப்பவனின் இயல்பையும் திறனையும் நோக்கத்தையும் சார்ந்துதான் இருக்கும்.

பேராசிரியரின் கேள்விகளும் திரு அப்துல் ஹமீத்தின் பதில்களும் முற்றிலும் வேறு வேறு திசைகளில் போய்க்கொண்டிருந்தன. அவற்றை இதற்கு மேல் விவாதிப்பதில் பயன் இல்லை.  ஆனாலும் பேராசிரியரின் ஆளுமையை அறியாமல் இந்தப் பதிவைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகின்றேன். காரணம், பேராசிரியர்மீது அன்பும், அபிமானமும், மரியாதையும் கொண்டவள் நான்.

பொதுவாகவே நடிகர்கள், கலைஞர்கள் போன்றோர்களைத் தலைமேல் கொள்ளும் ரசிகர்களும் வாசகர்களும் இருப்பார்கள். அதற்காக அவர்கள் ஒன்றும் அனைத்தும் கடந்த புனிதர்கள் அல்ல.  இருவரும் மிகப்பெரிய ஆளுமைகள், இவர்களது மாண்பைக் குலைக்கும் எண்ணமும் என்னிடமில்லை என்பதைக் கூறிக்கொண்டு, நிகழாத விவாதத்தை இங்கே இத்துடன் இறுதிப் பதிவாக்கி நிறைவு செய்கிறேன்.

பேராசிரியர் அவர்களே!

மெல்லிய புன்னகையுடன் கடந்து போக வேண்டிய விஷயங்கள் இவை, இதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் நீங்கள் இல்லை, நலமாக இருங்கள்.


சௌந்தரி கணேசன்

சிட்னி,  20 செப்டம்பர் 2023.

ஆசி கந்தராஜா - திரு அப்துல் ஹமீட், செவ்வியை முழுமையாகக் கேட்க ஆசி கந்தராஜாவின் முகநூலிலுள்ள (A S Kantharajah), 14. செப்டம்பர் 2023 பதிவைப்பார்க்கவும்.