Thursday, 14 October 2021


தக்காளி ஏன் சுவைக்கிறது...?

'அஜினமோட்டோ' ( Ajinomoto -“Essence of Taste”).

இது இல்லாத சைனீஸ் உணவு வகைகளே இல்லை. 'அஜினமோட்டோ' சேர்க்காவிட்டால், சைனீஸ் சாப்பாடு 'சப்'பென்று இருக்கும்.

பண்டைய கால சீனர்களும், ஜப்பானியர்களும் தங்களின் உணவில் ஒருவித கடற்பாசியை சேர்தார்கள். அந்த கடல்பாசி புதுவித சுவையை கொடுப்பதை உணர்ந்தார்கள். இந்த கடல் பாசியில் அப்படி என்ன இருக்கின்றது...? என்று 1908 ம் ஆண்டு, ஆராய்ச்சியில் இறங்கினார் ஒரு ஜப்பானிய பேராசிரியர். கூடுதல் சுவைக்கு காரணம் மொனோ சோடியம் குளுட்டாமேட் -MSG-  (Mono sodium glutamate)   என்ற வேதிப்பொருள்தான் என்பதை அறிந்தார். பின்பு அதிக ஆராய்ச்சி செய்து, இந்த மொனோ சோடியம் குளுட்டாமேட்டை எப்படி கடல் பாசியில் இருந்து பிரித்து எடுப்பது என்ற ரகசியத்தை கண்டு பிடித்தார். உடனே ஒரு பணக்கார ஜப்பானிய நிறுவனம், பேராசிரியரை நண்பனாக்கி, அந்த ரகசியத்தை பெற்றுக்கொண்டது. பின்பு அதை வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்தது. இந்த நிறுவனம்தான் அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto).

மொனோ சோடியம் குளுட்டாமேட் -MSG-  (Mono sodium glutamate) என்ற வேதிப்பொருளை அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto) என்ற ஜப்பானிய நிறுவனம், செயற்கை முறையில் தயாரித்ததால், அதன் கம்பெனி பெயரான 'அஜினமோட்டோ'வே (Aji-no-moto)  இந்த வேதிப் பொருளின் பெயராகி பிரபலமாகி விட்டது.

உதாரணமாக, Photo copy என்றால் சிலருக்கு புரியாது. இதையே 'ஜெராக்ஸ்' என்று சொல்லுங்கள். புரிந்து விடும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர்.

இனி தக்காளி விசயத்துக்கு வருகிறேன்.

இந்த மொனோ சோடியம் குளுட்டாமேட் MSG (Mono sodium glutamate) தக்காளியில் “இயற்கையாக” இருப்தாலேயே தக்காளி சுவைக்கிறது. இதனாலேயே எமது உணவுத் தயாரிப்பில் தக்காளி முதலிடம் வகிக்கிறது.

செயற்கையாக தயாரிக்கப்பட்ட 'அஜினமோட்டோ' உப்பை அதிகளவில் உணவில் சேர்ப்பது சௌக்கியத்துக்கு தீங்கானது.

சைனீஸ் உணவுப் பிரியர்களே உசாராக இருங்கள்....!


நிர்வாண அடி!

நிர்வாண அடி!

சிறுவயதில், எங்கள் வீட்டிலே எனக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் அடி விழுவதுண்டு. அவைகளும் பாவப்பட்ட ஜென்மங்கள். வளவில் எந்த மரமாவது காய்க்காமல் டிமிக்கி விட்டால், அடிக்காத மாடு படிக்காது என்ற கொள்கைப்படி, கோடாலியின் பின் புறத்தால் நாலு சாத்து சாத்துவார்கள். அவர்களின் தியறி சில மரங்களில் வேலை செய்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதன் சூக்குமம், நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் வரை விளங்கவில்லை. கோடாலியால் அடிவாங்கிய நோவினால் மரங்கள் காய்க்கவில்லை என்றாலும், அடி வைத்தியத்தில் வீட்டாருக்குத் தெரியாத அறிவியல் விளக்கங்கள் பல புதைந்து கிடப்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு தாவரத்தில் நீரையும் ஊட்டச் சத்தையும் இலைகளுக்கு கடத்துவது, காழ்க் கலங்கள் (Xylem Cells). இதற்கு வெளியேயுள்ள உரியக் கலங்கள் (Phloem Cells) இலையிலே தயாரிக்கப்பட்ட உணவை, வேருக்கும் தாவரத்தின் மற்றைய பகுதிகளுக்கும் கடத்துகிறது. கோடாலியால் மரத்தை அடிக்கும்போது, உணவைக் கடத்தும் உரியக் கலங்கள் சிதைக்கப்பட, தயாரித்த உணவின் பெரும்பகுதி தாவரத்தின் கிளைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் அங்கு உடல் தொழில் மாற்றங்கள் ஏற்பட்டு, தாவரம் பூக்கத் துவங்கும்.

இதற்கும் மேலாக, பலா மரத்தில் இன்னொரு விஷயமும் நடக்கிறது. பலாவில்,  புதிய அரும்பில் இருந்தே பூக்கள் தோன்றும். கோடாலியால் பலாவில் அடித்த காயம் மாறும் போது, அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி பூக்களாகி காயாகும்.

மரத்தைச் சுற்றி நிறைய அடி போட்டால், உரியக் கலங்கள் முற்றாக அறுபட, மரம் செத்துவிடும்.

விவசாய பண்ணைகளில், கூரிய கத்தியால் அடிமரத்து மரப் பட்டையை அரை சென்ரி மீட்டர் அகலத்துக்கு 'இடையிடையே' வெட்டிவிடுவார்கள்.

மரம் நிறையக் காய்க்கட்டும்' என்ற பேராசையில், மரத்தைச் சுற்றியுள்ள பட்டையை முழுமையாக வெட்டி வரைந்து விட்டால், அடுத்த வருடம் மரம், விறகுக்குத்தான் பயன்படும். இதை விடுத்து, வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மந்திர உச்சாடனம் செய்தபடி கோடாலியால் மரத்தை அடிக்க வேண்டுமென்பதோ, நடு இரவில் நிர்வாணமாய் சென்று அடிக்கவேண்டும் என்பதோ, வெறும் கட்டுக் கதைகளே.


Sunday, 10 October 2021

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே...!

ன்று வைகாசி விசாகம். எங்கள் குடும்ப வைரவருக்கு முக்கனிகள் சகிதம் படையல் வைத்தோம். கந்தையா அம்மானின் தோட்டத்தில் வெட்டிப் புகைப் போட்டு, பழுக்க வைத்த, ஆமான கதலிக் குலை, கறுத்தக் கொழும்பான் மாம்பழம், அடி மரத்தில் காய்த்துப் பழுத்த பலாப்பழம் என, பல வகைப்பட்ட பழங்கள், வைரவரின் மடைக்கு வரிசை கட்டி நின்றன.

பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடங்களுடன் நான் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் இந்துசமயமும் படித்தேன். இலக்கியத்தில் பாரதி பாடலுடன் பாரதிதாஸன் பாடல்களையும் சிற்றம்பலம் மாஸ்டர் படிப்பித்தார்.



'கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே, இங்கு வேரிற் பழுத்த பலா' எனத் துவங்கும் பாரதிதாஸன் பாடலை, அன்றைய இலக்கிய வகுப்பில் வாசித்து, சிற்றம்பலம் மாஸ்டர் பொழிப்புரை சொன்னார்.

எனக்கு எப்பொழுதும் குறுக்குப் புத்தி. வேரில் கிழங்குதானே விழும், எப்படிக் காய் காய்த்துப் பழுக்கும்? என என் மூளை, குறுக்குச் சால் ஓடியது. இதை தாவரவியல் படிப்பித்த வாத்தியாரைக் கேட்கப் பயம். அமைதியாக இருந்துவிட்டேன்.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் Under ground stem என்போம்.  இதிலிருந்து தோன்றிய முகை அரும்பாகி, மண்ணுக்கு வெளியே எட்டிப் பார்த்து, காயாக மாறும்போது அது வேரில் காய்த்தது போலத் தோன்றும். இதைத்தான் வேரில் பழுத்த பலா என்பார்கள். எந்த மரத்திலும் வேரிலிருந்து காய்கள் தோன்றுவதில்லை, என்ற இந்த உண்மையை நான் பல்கலைக் கழகத்தில் விவசாயம் படித்தபோது தெரிந்துகொண்டேன்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள்.

Thursday, 7 October 2021

கல்லாக்காரம்




னங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம், சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிப்பது. இது, பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரைக் (கருப்பணி) காய்ச்சிப் பெறப்படுவது. நூறு லிட்டரகள்; பதநீரைக் காய்ச்சி, ஐந்து கிலோ பனங்கற்கண்டு தயாரிக்கலாம்.

இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் நிறைந்துள்ளன என்றும் நீரிழிவு நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பனங்கற்கண்டை பயன்படுத்துவது நல்லது எனவும் அறிவியல் தகவல்கள் சொல்கின்றன.

தினமும் நான் சிறு துண்டு பனம் கற்கண்டை வாயில்போட்டு உமிழ்ந்தபடி, தேத்தண்ணி கோப்பி குடிப்பதுண்டு. சீனி, சர்க்கரை பாவிப்பதில்லை.

பசும்பாலுடன் மிளகும் பனங்கற்கண்டும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிப்பது எங்கள் ஊர் இருமல் வைத்தியம்.

பனம் கற்கண்டுடன் தேன், எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, தரமான பிரண்டி (Brandy) என்பன கலந்து, இரவு படுப்பதற்கு முன் சொட்டுச் சொட்டாகப் பருகுவது, எனது நவீன இருமல் மருந்து. ஓரிரு நாளில் இருமல் பறந்துவிடும். அநுபவத்தில் சொல்கிறேன், செய்து பாருங்கள்.

பிரண்டிக்கு பதிலாக பனஞ்சாராயம் சேர்ப்பது அதி விஷேசம் என்கிறான் சிட்னியில் வசிக்கும் நண்பக் ஓருவன். பிரண்டியையும் பனஞ்சாராயத்தையும் மருந்துபோலச் சேர்க்கவேண்டும். போதைக்காக அல்ல!

பனம்பொருள் அபிவிருத்தி சபை தயாரித்த பனம் கற்கண்டு தமிழ்க் கடைகளில் கிடைக்கும். படத்திலுள்ள பனம் கற்கண்டு வடமராட்சித் தயாரிப்பு.

 

 

Tuesday, 5 October 2021


'பலாக் கட்டை'



செண்பகவரியன் பலாப்பழம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. இதில் இளம் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறைய சுளைகள் இருக்கும். மிகவும் இனிப்பான, நார்த்தன்மை அற்ற இச் சுளைகளைக் கடித்தால் தொதல் போல இரண்டு துண்டாகும். எங்கள் வளவிலும் செண்பகவரியன் பலாக் கட்டையை, சாவகச்சேரி சந்தையில் வாங்கி நட்டோம். அது கிசுகிசுவென வளர்ந்து வஞ்சகம் செய்யாமல் காய்த்தது.

பலாக் கட்டை என்ற பதம் சற்று விசித்திரமானது. பலா மரத்தின் நீண்ட கிளையை வெட்டிப் பதிவைத்த வெட்டுத் துண்டை, பலாக் கட்டை என்பார்கள்.

Friday, 1 October 2021

 

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும்.




த்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் 'கருகம்பனை' என்று அழைக்கப்படும் ஓர் பெண்மணி எமது அயலில் வாழ்ந்தார். நான் உட்பட ஊரிலுள்ள பலரும், 'கருகம்பனை'தான் அவரது பெயரென  எண்ணியிருந்தோம். இந்தப் பத்தி எழுதுவதற்கு முன்னர், ஊரில் வாழும் பெரிசுகளிடம் அவரது உண்மையான பெயர் என்ன? எனத் தட்டிப்பார்த்தேன். ம்ஹூம்! இன்றுவரை ஒருவருக்கும் அவர் பெயர் தெரியவில்லை.

கருகம்பனை என்ற ஊரில் பிறந்த அவர், எமது ஊரில் வாழ்க்கைப் பட்டதாக, கோவில் பெரிய குருக்கள் சொன்னார். ஊர்ப் பெயருக்கு ஏற்றபடி கரிய, நெடிய, திடமான உடல் தோற்றம் கொண்ட அவர், பாயில் கிடந்து அழுந்தாமல் தனது தெண்ணூற்று ஐந்தாவது வயதில் மாரடைப்பு வந்து காலமானதாக அறிந்தேன். 

கருகம்பனை, யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டி கீரிமலை வீதியில், கீரிமலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிராமம். பெயருக்குச் சாட்சியாக அங்கு பனைகள் நிறைந்திருந்தன.  உண்மையைச் சொன்னால், நான் மஹாஜனாக் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பில் சேரும்வரை கருகம்பனை பற்றிக் கேள்விப் பட்டதில்லை. மஹாஜனாக் கல்லூரியை பாவலர் துரையப்பா, கொட்டில் கட்டி ஆரம்பித்தபோது, தேவைப்பட்ட பனைமரங்கள் அங்கிருந்துதான் தறித்து வரப்பட்டதாகச் சொன்னார்கள். கருகம்பனைக் கதையுடன் கூவில் கள்ளும் கவுணாவத்தை வேள்வியும் சேர்ந்தே வரும். கருகம்பனைக் கிராமத்திலும் அதன் அருகேயுள்ள கூவில், வெளிக்கூவில் பிரதேசங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகள் வரை வைரம் பாய்ந்த, நூறு வருடங்களுக்கு மேற்பட்ட பனைகள் நின்று ஆட்சி புரிந்ததாக, பிறிதொரு தகவல் சொல்கிறது.

Tuesday, 28 September 2021

கட்டையர்,  எம் ஊர் (கைதடி) கட்டையர்!

பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம் ‘Four pack, six pack’  உடம்புக்காக இளஞர்கள் ஜிம்முக்கு அலைவார்களே...? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும் குரக்கனும் சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு ‘six pack’ உடம்பு தானாகவே வந்தது.  அவர் கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார் ###

யாழ்ப்பாணத்தில் பல தோட்டங்களுக்கு நடுவில் ஒரு பொதுவான கிணறு இருக்கும். அறுபதுகள் வரை பட்டை இறைப்புத்தான். இதற்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். பெரிஐயா ஒரு விவசாயி. அவரின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும் நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.

Monday, 27 September 2021

முந்தானை முடிச்சும் முருங்கைக்காயும்



யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. சிட்னியில் என்னுடன் அவர் இருபத்தைந்து வருடங்கள் சுகதேகியாக வாழ்ந்து, 92 வயதில் காலமாகும்வரை அவரது முப்பத்துரண்டு பற்களும் விழாமல் அப்படியே இருந்தன.

வீட்டில் முருங்கைக்காய் சமாசாரம் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அம்மா அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.

உலாந்தா முருங்கைக்காய் மிக நீளமானது. இலங்கையின் ஏனைய பகுதிகளிலே 'யாழ்ப்பாண முருங்கை' என்று அழைக்கப்படும் இது, யாழ்குடா நாட்டில் மட்டுமே 'உலாந்தா முருங்கை' என்று அழைக்கப்படுகின்றது. 'உலாந்தா முருங்கை' என்ற பெயர் வந்த வர்த்தமானத்தை என்னுடைய பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டேன். ‘Surveyor’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நில அளவையாளர்' என்பது தமிழாக வழங்கும் பொழுது, யாழ்ப்பாணத்தில் மட்டும் 'உலாந்தா' என்று அழைக்கப்படுவதும் உண்டு.

ஆங்கிலேயருக்கு முன், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டார்கள். இந்த 'உலாந்தர்களே' முதன்முதலில் இலங்கையில், முறைப்படி நிலஅளவை செய்தார்கள். அதைச் செய்தவனை யாழ்ப்பாணத்தில் 'உலாந்தா' என்று அழைத்தார்கள். இந்த 'உலாந்தர்' இந்தோனேசியத் தீவுகளையும் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அங்கே கண்ட நல்ல முருங்கை வகையை யாழ்ப்பாண விவசாயிக்கு அறிமுகப் படுத்தினார்களாம். இந்த வரலாற்றினை, முன்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், உலாந்தா முருங்கை என்று பெயர் வைக்கப்பட்டதாம்.

சும்மா சொல்லப்படாது!

Saturday, 8 May 2021

'எரிற்றியர்களும் இலங்கைத் தமிழர்களும்'

-1-

ன்று சனிக்கிழமை. காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போலத் தோன்றியது. வீதிக்கு வந்தான் முகுந்தன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை. உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், ஆரம்பித்த நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை, ஆகிய சகல விபரங்களும் தாங்கிய விளம்பர பலகை யொன்று சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி வழங்கும் உலக நிறுவனங்கள் அடுத்தடுத்து வைத்திருப்பார்கள்.

முகுந்தன் தங்கி ருந்த ஹோட்டல், நெடுஞ் சாலையைக் கடக்கும் குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. நெடுஞ் சாலையில் யப்பானிலிருந்து இறக்குமதியான ஆடம்பர வாகனங்கள்,அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பாதசாரிகள் சர்வசாதாரணமாக, குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத் துணிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் முகுந்தன்.

'ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டவாறே எதியோப்பிய இளைஞன் ஒருவன், புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான்.

'நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு பரிமாறினேன். நான் எட்வேட், என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன்' எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான்.

Saturday, 3 April 2021

ஆசி கந்தராஜாவின் 'கீதையடிநீயெனக்கு’. ஒரு பார்வை

-ரஞ்ஜனி சுப்ரமணியம்-


புகழ் பெற்ற புனைவுகள் அனைத்தின் ஆழத்திலும் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருப்பது மானுட வாழ்க்கையின் நிஜ தரிசனங்கள்தான். மீண்டும் வாழ முடியாத தன் கடந்த காலத்தின் நினைவுகளை அல்லது கனவு காணும் எதிர்காலத்தை, இன்னொருவரின் எழுத்தில் காணும் வாசகன், அதில் மனம் ஒன்றிப் போகும் கணங்களின் தாக்கமே அந்தப் புனைவுகளின் வெற்றியாக உருமாற்றம் பெறுகிறது.

இந்தவகையில்  ஆசி கந்தராஜா அவர்களின் 'கீதையடி நீயெனக்குஎன்ற குறுநாவல் தொகுதியானதுபுனைவு நிலை கடந்து வாழ்க்கைப் பதிவுகளின் மீட்டல் என்ற நிலைக்கு உயர்கிறது. தத்துவார்த்தமான சிந்தனையைத் தூண்டும் தலைப்பு படைப்பாளியின் சிறந்த உத்தியாகவும்வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதால் புனைவின் வெற்றிக்கு பலம் சேர்ப்பதாகவும் அமைகிறது. ஆறு சிறந்த குறுநாவல்களை உள்ளடக்கிய இந்நூல் சென்னை 'மித்ராபதிப்பகத்தின் வெளியீடாகும். புகழ் பெற்ற எழுத்தாளர்களான  மாலன்எஸ்.பொ. ஆகியோரது முகவுரைகளால் அணி செய்யப்பட்டும் சிறப்புறுகிறது.